தஞ்சையில் உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு ஊர்வலம் - கலெக்டர் அண்ணாதுரை தொடங்கிவைத்தார்


தஞ்சையில் உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு ஊர்வலம் - கலெக்டர் அண்ணாதுரை தொடங்கிவைத்தார்
x
தினத்தந்தி 3 Aug 2019 12:01 AM GMT (Updated: 3 Aug 2019 12:01 AM GMT)

உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு ஊர்வலம் தஞ்சையில் நடைபெற்றது. இதனை கலெக்டர் அண்ணாதுரை தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூர்,

தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி குழந்தைநலப் பிரிவு, ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட குழந்தைகள் நல டாக்டர்கள் சங்கம் மற்றும் தஞ்சை ஹோஸ்ட் அரிமாசங்கம் சார்பில் உலக தாய்ப்பால் வார தொடக்க விழா மற்றும் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

ஊர்வலத்தை தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

தாய்ப்பால் முக்கியத்துவம் மற்றும் நன்மைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதே உலக தாய்பால் வாரத்தின் நோக்கமாகும். தாய்ப்பால் கொடுப்பது பாலூட்டும் உயிரினங்களுக்கு மட்டும் உரிய ஒரு மகத்துவமான விஷயமாகும். தாய்ப்பால் என்பது தாயிடமிருந்து குழந்தைக்கு கொடுக்கப்படும் உணவு என்பதை தாண்டி, தாயிடமிருந்து குழந்தைக்கு அளிக்கப்படும் நோய் எதிர்்ப்பு சக்திக்கான மருந்தாகும்.

தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் குழந்தைகள் மட்டும் பயனடைவதுமட்டுமல்லாமல், தாய்மார்களுக்கும் மார்பக புற்று நோய் போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறைகிறது. பிறந்த குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். ஆரோக்கியமான குழந்தைகள் மூலம் நாட்டின் எதிர்காலம் ஆரோக்கியமாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல்வர் குமுதாலிங்கராஜ், மருத்துவக்கல்லூரியின் முன்னாள் முதல்வர் சிங்காரவேலு, அரிமா சங்க தலைவர் சின்னத்துரை, குழந்தைகள் நல பிரிவின் துறைத்தலைவர் ராஜசேகர், தஞ்சை மாவட்ட குழந்தைகள் நல டாக்டர்கள் சங்க தலைவர் செல்வக்குமார், செயலாளர் பழனிசாமி, பொருளாளர் செந்தில்குமார் மற்றும் டாக்டர்கள், மாணவர்கள், செவிலியர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் குழந்தை பெற்ற பெண்களுக்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் குழந்தைகள் நலப்பெட்டகத்தையும் கலெக்டர் அண்ணாதுரை வழங்கினர்.


Next Story