ரிஷிவந்தியத்தில், மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வாகனம் மோதல், விவசாயி பலி - 2 பேர் படுகாயம்


ரிஷிவந்தியத்தில், மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வாகனம் மோதல், விவசாயி பலி - 2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 4 Aug 2019 10:15 PM GMT (Updated: 4 Aug 2019 5:41 PM GMT)

ரிஷிவந்தியத்தில் மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வாகனம் மோதியதில் விவசாயி பரிதாபமாக இறந்தார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

ரிஷிவந்தியம்,

ரிஷிவந்தியம் அருகே காட்டுஎடையார் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 26). விவசாயி. இவரும், அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை (40), குப்பன் (60) ஆகியோரும் ஒரு மோட்டார் சைக்கிளில் ரிஷிவந்தியத்தில் இருந்து காட்டுஎடையார் கிராமத்திற்கு புறப்பட்டு சென்றனர். மோட்டார் சைக்கிளை செல்வம் ஓட்டினார். ரிஷிவந்தியத்தில் உள்ள திருக்கோவிலூர் சாலையில் சென்றபோது, எதிரே வந்த சரக்கு வாகனம் ஒன்று எதிர்பாராதவிதமாக குப்பன் உள்ளிட்டோர் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் விபத்தில் பலத்த காயம் அடைந்த செல்வம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த குப்பன், ஏழுமலை ஆகியோரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனிடையே இது குறித்த தகவலின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் இறந்த செல்வத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story