திருவள்ளூரில் வீடு புகுந்து திருட முயன்றவருக்கு தர்ம அடி


திருவள்ளூரில் வீடு புகுந்து திருட முயன்றவருக்கு தர்ம அடி
x
தினத்தந்தி 8 Aug 2019 10:30 PM GMT (Updated: 8 Aug 2019 8:06 PM GMT)

திருவள்ளூரில் வீடு புகுந்து திருட முயன்றவருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த காக்களூர் மாருதி நியூடவுனை சேர்ந்தவர் விஜயராகவன் (வயது 42). இவர் நேற்றுமுன்தினம் தன்னுடைய வீட்டை பூட்டிவிட்டு வேலையின் காரணமாக வெளியே சென்றார். மதியம் அவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார் உள்ளே சென்று பார்த்தபோது அவரது வீட்டின் உள்ளே இருந்து 2 பேர் தப்பி ஓட முயன்றனர்.

இதைத்தொடர்ந்து விஜயராகவன் திருடன், திருடன் என கூச்சலிட்டவாறு பின்னால் ஓடினார். அவர்களில் ஒருவர் தப்பி ஓடி விட்டார். மற்றொருவர் அந்த வீட்டின் மாடியில் ஏறி அங்கிருந்து கீழே குதித்தார்.

அப்போது அங்கு இருந்த பொதுமக்கள் அந்த நபரை பிடித்து தர்ம அடி கொடுத்து திருவள்ளூர் தாலுகா போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் அவர் தர்மபுரி மாவட்டம் வெற்கணாம்பட்டி கிராமத்தை சேர்ந்த மொய்தீன் (30) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

தப்பி ஓடியவர் மொய்தீனின் சகோதரர் சாதிக் என்பது தெரியவந்தது. போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Next Story