ஆந்திராவில் இருந்து சரக்கு ரெயிலில் தஞ்சைக்கு 2,400 டன் டி.ஏ.பி. உரம் டெல்டா மாவட்டங்களுக்கு லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டது


ஆந்திராவில் இருந்து சரக்கு ரெயிலில் தஞ்சைக்கு 2,400 டன் டி.ஏ.பி. உரம் டெல்டா மாவட்டங்களுக்கு லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டது
x
தினத்தந்தி 10 Aug 2019 10:30 PM GMT (Updated: 10 Aug 2019 7:34 PM GMT)

ஆந்திராவில் இருந்து சரக்கு ரெயிலில் தஞ்சைக்கு 2,400 டன் டி.ஏ.பி. உரம் வந்தது. தஞ்சையில் இருந்து உர மூட்டைகள் டெல்டா மாவட்டங்களுக்கு லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டது.

தஞ்சாவூர்,

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து வழக்கமாக ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்படும். அப்படி திறக்கப்பட்டால் அதிக பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படும். இல்லையென்றால் ஆழ்குழாய் கிணறு மூலம் குறைந்த பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படும்.

இதற்கு தேவையான விதை நெல், உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மற்றும் தனியார் விற்பனை நிலையங்கள் மூலம் வினியோகம் செய்யப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறந்துவிடப்படாததால் ஆழ்குழாய் கிணறு மூலம் குறுவை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மட்டும் 90 ஆயிரம் எக்டேர் வரை குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

2,400 டன் டி.ஏ.பி உரம்

தற்போது சம்பா சாகுபடி பணிக்கான ஆயத்த பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதற்கு தேவையான உரங்கள், விதை நெல் வரவழைக்கப்பட்டு இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி விசாகப்பட்டினத்தில் இருந்து சரக்கு ரெயிலில் 2,400 டன் டி.ஏ.பி. உரம் நேற்று தஞ்சை ரெயில் நிலையத்திற்கு வந்தது.

42 வேகன்களில் வந்த இந்த உர மூட்டைகள், லாரிகளில் ஏற்றப்பட்டு காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

Next Story