மூங்கில்துறைப்பட்டு அருகே டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி -மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


மூங்கில்துறைப்பட்டு அருகே டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி -மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 10 Aug 2019 10:24 PM GMT (Updated: 10 Aug 2019 10:24 PM GMT)

மூங்கில்துறைப்பட்டு அருகே டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மூங்கில்துறைப்பட்டு,

மூங்கில்துறைப்பட்டு அருகே கடுவனூரில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் மேற்பார்வையாளராக சிவக்குமார் என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் சிவக்குமார் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். இந்த நிலையில் நேற்று காலை டாஸ்மாக் கடை ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து அவர்கள், மேற்பார்வையாளர் மற்றும் சங்கராபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கடைக்குள் சென்று பார்த்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், மேற்பார்வையாளர் கடையை பூட்டிவிட்டு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவு கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். ஆனால் கடைக்குள் இருந்த கல்லாபெட்டியில் பணம் ஏதும் இல்லாததால் ஏமாற்றமடைந்த மர்மநபர்கள் கொள்ளையடிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

கண்காணிப்பு கேமரா என்று நினைத்து மின் விளக்கை மூடிய மர்மநபர்கள்

டாஸ்மாக் கடைக்குள் கொள்ளையடிப்பதற்காக வந்த மர்மநபர்கள், கடை முன்பு இருந்த மின்விளக்கை கண்காணிப்பு கேமரா என நினைத்து அதன் மீது பேப்பர் மற்றும் சிறிய கட்டையை வைத்து மூடி மறைத்துள்ளனர். தொடர்ந்து அவர்கள் கடை ஷட்டர் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்றதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

Next Story