திருச்சி, கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர் மாவட்டங்களின் அ.ம.மு.க. தலைமை கழக பேச்சாளர்களுக்கான பயிற்சி முகாம்


திருச்சி, கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர் மாவட்டங்களின் அ.ம.மு.க. தலைமை கழக பேச்சாளர்களுக்கான பயிற்சி முகாம்
x
தினத்தந்தி 11 Aug 2019 10:45 PM GMT (Updated: 11 Aug 2019 8:35 PM GMT)

புதுக்கோட்டை தெற்கு மற்றும் கரூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களின் தலைமை கழக பேச்சாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் மற்றும் பயிற்சி முகாம் திருச்சியில் நேற்று நடந்தது.

திருச்சி,

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் திருச்சி மாநகர், திருச்சி வடக்கு, திருச்சி தெற்கு, புதுக்கோட்டை வடக்கு, புதுக்கோட்டை தெற்கு மற்றும் கரூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களின் தலைமை கழக பேச்சாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் மற்றும் பயிற்சி முகாம் திருச்சியில் நேற்று நடந்தது.

கூட்டத்துக்கு மாநில கொள்கை பரப்பு செயலாளர் சி.ஆர்.சரஸ்வதி தலைமை தாங்கி பேசினார். தலைமை நிலைய செயலாளரும், திருச்சி வடக்கு மாவட்ட செயலாளருமான ஆர்.மனோகரன் முன்னிலை வகித்தார். இதில் முன்னாள் அமைச்சர் வளர்மதி ஜெபராஜ், மாநில அமைப்பு செயலாளர் சாருபாலா தொண்டைமான், மாவட்ட செயலாளர்கள் சீனிவாசன்(திருச்சி மாநகர்), ராஜசேகர்(திருச்சி தெற்கு), பரணி கார்த்தி(புதுக்கோட்டை), எஸ்.கே.கார்த்திகேயன்(பெரம்பலூர்), தங்கவேல்(கரூர்) மற்றும் தலைமை கழக பேச்சாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் சி.ஆர்.சரஸ்வதி பேசுகையில், ‘நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் நாம் தோல்வியை தழுவினாலும் அந்த தோல்விக்கு பொறுப்பேற்றவர் நமது தலைவர் டி.டி.வி.தினகரன். தோல்விதான் நமது வெற்றிக்கு முதல் படிக்கட்டு. இனி வெற்றியை நோக்கி 2-ம் கட்ட பயணம் தொடரப்போகிறார். இப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருப்பது அ.தி.மு.க. அல்ல. அது நரேந்திரமோடி அ.தி.மு.க., அடிமைகள் அ.தி.மு.க., ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். அ.தி.மு.க.” என்றார்.

தொடர்ந்து தலைமை கழக பேச்சாளர்கள் எப்படி பொதுக்கூட்டங்களில் பேச வேண்டும் எனவும், வருகிற சட்டமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அமோக வெற்றிபெற கடுமையாக உழைக்க வேண்டும் எனவும் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் பேச்சாளர்களின் பெயர்களுக்கு முன்னால் அவர்களின் பட்டப்பெயர்கள் இருந்தால் அதை அடைமொழியுடன் அழைக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Next Story