கூடுவாஞ்சேரியில் வங்கியில் கொள்ளை முயற்சி; நகை, பணம் தப்பியது


கூடுவாஞ்சேரியில் வங்கியில் கொள்ளை முயற்சி; நகை, பணம் தப்பியது
x
தினத்தந்தி 12 Aug 2019 11:15 PM GMT (Updated: 12 Aug 2019 4:22 PM GMT)

கூடுவாஞ்சேரியில் வங்கியின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியில் உள்ள திருப்பூர் குமரன் தெருவில் நாட்டுடமையாக்கப்பட்ட வங்கியின் கிளை உள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வங்கிப் பணிகளை முடித்துவிட்டு வங்கியின் மேலாளர் வங்கியை பூட்டிக்கொண்டு வீட்டிற்கு சென்றார். இந்த நிலையில் நேற்று விடியற்காலை அதே பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் வங்கி அமைந்துள்ள திருப்பூர் குமரன் சாலை வழியாக நடைபயிற்சி சென்றார்.

அப்போது, வங்கியின் முன்பக்க இரும்பு கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து உள்ளார்.

உடனே அவர் வங்கி மேலாளருக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து, வங்கி மேலாளர் வங்கிக்கு விரைந்து வந்து பார்த்தபோது, வங்கியின் முன்பக்க இரும்பு கதவில் இருந்த 2 பூட்டுகள் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் உள்ளே சென்று வங்கியில் உள்ள நகை, பணம் திருட்டுபோகாமல் பத்திரமாக இருக்கிறதா? என்று ஆய்வு செய்தார். அங்கு நகை-பணம் எதுவும் திருட்டு போகவில்லை என்பதை அறிந்து நிம்மதி அடைந்தார்.

இதைதொடர்ந்து அவர் கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தார். உடனே சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை செய்தனர்.

மேலும் கைரேகை நிபுணர்களும் அங்கு வரவழைக்கப்பட்டு, வங்கியில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்து கொண்டனர்.

இதன் பின்னர் போலீசார் வங்கியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், விடியற்காலையில் வாலிபர் ஒருவர் வங்கியின் பக்கத்து வீட்டின் சுற்றுச்சுவர் மீது ஏறி வங்கி வளாகத்தில் குதித்து, எச்சரிக்கை அலாரத்தின் இணைப்பை துண்டித்துவிட்டு வங்கி முன்பக்க இரும்பு கேட்டில் இருந்த 2 பூட்டுகளை உடைத்து உள்ளே சென்றுள்ளதும், அதன் பின்னர், வங்கியின் உள்ளே சுற்றித்திரிந்து விட்டு அங்கு இருந்து வெளியே சென்றதும் தெரியவந்தது.

இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, வங்கியில் கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட வாலிபரை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

Next Story