மஞ்சளுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயிக்க வேண்டும்; ஆலோசனை கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை


மஞ்சளுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயிக்க வேண்டும்; ஆலோசனை கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 12 Aug 2019 10:15 PM GMT (Updated: 12 Aug 2019 8:21 PM GMT)

மஞ்சளுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயிக்க வேண்டும் என்று ஈரோட்டில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ஈரோடு,

ஈரோடு ஒழுங்குமுறை விற்பனை கூடம், பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடம், ஈரோடு மற்றும் கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் ஆகிய இடங்களில் மஞ்சள் ஏலம் விடப்படுகிறது. இந்த மஞ்சள் மார்க்கெட்டுகளை ஒன்றுசேர்த்து ஒருங்கிணைந்த மஞ்சள் மார்க்கெட் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். அதன்படி ஒருங்கிணைந்த மஞ்சள் மார்க்கெட் அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடந்தது.

கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) முருகேசன் பேசும்போது, “ஒரே இடத்தில் ஏலம் நடத்துவது தொடர்பாக யு.எம்.பி. என்ற சாப்ட்வேர் உருவாக்கப்பட்டு உள்ளது. அது தொடர்பாக விவசாயிகள் கருத்து தெரிவிக்கலாம்”, என்று கூறினார். அந்த சாப்ட்வேர் குறித்து மாவட்ட விற்பனைக்குழு செயலாளர் சின்னசாமி விளக்கம் அளித்தார்.

கூட்டத்தில் விவசாயிகள் தங்களது கருத்துகளை தெரிவித்து பேசினார்கள். அப்போது அவர்கள் கூறியதாவது:-

மஞ்சளை தரம் பிரித்து வெளியிடுவதன் மூலம் விலையை நிர்ணயிப்பது எளிதாக இருக்கும். மேலும், மார்க்கெட் கமிட்டியின் மூலம் உலக அளவில் நேரடியாக விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்தால் விவசாயிகள் பயன்பெறுவார்கள். மஞ்சளுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய வேண்டும். இதனால் ஒருங்கிணைந்த ஏலத்தில் மஞ்சளுக்கு கூடுதல் விலை கிடைக்கும். மஞ்சள் விவசாயிகள் பயன்பெறும் வகையில் விவசாயிகள், மார்க்கெட் கமிட்டி அதிகாரிகள், மஞ்சள் வணிகர்கள் ஆகியோர் கொண்ட குழு அமைக்க வேண்டும்.

ஏலத்துக்கு மஞ்சள் கொண்டு வரும் விவசாயி, ஏலம் எடுக்கும் வியாபாரி ஆகியோர் பெயர்களை குறிப்பிடாமல் வரிசை எண் மட்டும் குறிப்பிட வேண்டும். மஞ்சள் ஏலத்துக்கு வரும்போதே மஞ்சளில் உள்ள கல், மண் நீக்கி இருக்க வேண்டும். தரம் பிரித்த, தரம் பிரிக்காத மஞ்சள் என ஏலத்தில் வைக்க வேண்டும். பிளாஸ்டிக் சாக்கு பயன்படுத்துவதன் மூலம் 100 கிராம் மட்டுமே கூடுதல் எடையாகும்.

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த விதை மஞ்சளுக்கு கூடுதல் விலை கிடைத்ததால் வெளிமாநில வியாபாரிகளுக்கு அதை விவசாயிகள் விற்பனை செய்தனர். அதன் விளைவாக வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் குறைந்த செலவில் தரமான மஞ்சளை உற்பத்தி செய்கின்றனர். இதன் காரணமாக ஈரோடு மஞ்சளுக்கு விலை கிடைக்கவில்லை. நிஜாமாபாத்தில் மஞ்சள் வாரியம் அமைக்கப்பட உள்ளதாக தெரிகிறது. இதனால் ஈரோடு விவசாயிகளுக்கு பலன் கிடைக்காது. எனவே, தமிழகத்தில் மஞ்சள் வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் கூறினார்கள்.

Next Story