விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கொலை: போலீசார் தேடிய வாலிபர் கைது


விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கொலை: போலீசார் தேடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 12 Aug 2019 11:00 PM GMT (Updated: 12 Aug 2019 8:27 PM GMT)

நாகர்கோவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த வாலிபரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

மேலகிருஷ்ணன்புதூர்,

நாகர்கோவில் அருகே பறக்கை மாவிளை காலனியை சேர்ந்தவர் புஷ்பாகரன் (வயது 40). இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை ராஜாக்கமங்கலம் ஒன்றிய துணை அமைப்பாளராக பதவி வகித்து வந்தார். சம்பவத்தன்று புஷ்பாகரன் 5 பேர் கொண்ட கும்பலால் படுகொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வந்தனர்.

கோர்ட்டில் சரண்

இந்தநிலையில் கொலை வழக்கு தொடர்பாக கிஷோர்குமார், மாதேஷ் கண்ணன், சஞ்சய்குமார், சஜன் ஆல்பர்ட் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும், இந்த கொலை வழக்கில் தொடர்புடைய குளத்தூரை சேர்ந்த சஜித் (19) என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் கோர்ட்டில் சரணடைந்தார். பின்னர், அவரை நாகர்கோவிலில் உள்ள சிறையில் அடைத்தனர். கொலை வழக்கில் கிஷோர் குமாரின் சகோதரர் பிரசன்னாவை (22) தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

மடக்கிப் பிடித்தனர்

இந்தநிலையில் நேற்று தலை மறைவாக இருந்த பிரசன்னா வெளியூர் தப்பிச் செல்ல இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையிலான போலீசார் வடசேரி முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து கேரளாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற பிரசன்னாவை தனிப்படை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். பின்னர், அவரை நெல்லை 2-வது அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

மேலும், ஏற்கனவே இந்த கொலை வழக்கு தொடர்பாக பத்மநாபபுரம் கோர்ட்டில் சரண் அடைந்த சஜித்தை சுசீந்திரம் போலீசார் இன்று (செவ்வாய்க்கிழமை) காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளனர்.


Next Story