காதலியை கத்தியால் குத்திவிட்டு தற்கொலைக்கு முயன்ற வாலிபர் கைது


காதலியை கத்தியால் குத்திவிட்டு தற்கொலைக்கு முயன்ற வாலிபர் கைது
x
தினத்தந்தி 12 Aug 2019 9:33 PM GMT (Updated: 12 Aug 2019 9:33 PM GMT)

வேறொருவருடன் பழகுவதாக சந்தேகம் காரணமாக காதலியை கத்தியால் குத்திவிட்டு தற்கொலைக்கு முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

தென்மும்பை தோபிதலாவ் பகுதியை சேர்ந்தவர் அக்சய் கதம் (வயது25). இவரும், 22 வயது இளம்பெண் ஒருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்தநிலையில், இளம்பெண் அண்மைகாலமாக அக்சய் கதமிடம் பேசுவதை தவிர்த்து வந்தார்.

தனது காதலி வேறொரு வாலிபருடன் பழகுவதாக அக்சய் கதம் சந்தேகப்பட்டார். சம்பவத்தன்று அவர் வேலைக்கு சென்று கொண்டிருந்த போது, தோபி தலாவ் பகுதியில் தனது காதலி நிற்பதை பார்த்தார்.

உடனே அவர் காதலியை தனது வீட்டுக்கு அழைத்து சென்றார். கதவை உள்பக்கமாக பூட்டிவிட்டு அவரிடம் சண்டை போட்டார். திடீரென அவர் வீட்டில் இருந்த கத்தியால் காதலியை சரமாரியாக குத்தினார். இதில் அந்த பெண் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். சத்தம் கேட்டு பக்கத்து வீட்டுக்காரர்கள் ஓடிவந்தனர்.

அவர்கள் கதவை திறக்கும்படி கூறினார்கள். ஆனால் அக்சய் கதம் கதவை திறக்கவில்லை. இதையடுத்து அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அக்சய் கதம் கத்தியால் தனது கையையும் அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு இளம்பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அக்சய் கதமை கைது செய்தனர்.

Next Story