கூடலூர்- கேரள மலைப்பாதையில், நிலச்சரிவுகளுக்கு இடையே சிக்கிய வாகனங்களை மீட்கும் பணி தீவிரம்


கூடலூர்- கேரள மலைப்பாதையில், நிலச்சரிவுகளுக்கு இடையே சிக்கிய வாகனங்களை மீட்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 12 Aug 2019 10:45 PM GMT (Updated: 12 Aug 2019 9:43 PM GMT)

கூடலூர்- கேரள மலைப்பாதையில் நிலச்சரிவுகளுக்கு இடையே சிக்கிய வாகனங்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கூடலூர்,

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. கொட்டி தீர்த்த மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் ஓவேலி கல்லறைமூலா, சீப்புரம், எலியாஸ்கடை பிரிவு, கீழ்நாடுகாணி உள்பட பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு போக்குவரத்து அடியோடு துண்டிக்கப்பட்டு உள்ளது. கூடலூரில் இருந்து கீழ்நாடுகாணி வழியாக கேரளாவுக்கு மலைப்பாதை செல்கிறது. இங்கு கடந்த 7-ந் தேதி இரவு பலத்த மழையால் சில கிலோ மீட்டர் தொலைவுக்கு நிலச்சரிவு ஏற்பட்டது.

மேலும் ராட்சத பாறைகளும் சரிந்து விழுந்தன. இதனால் கூடலூர்-கேரளா இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்த சமயத்தில் கேரளாவில் இருந்து கூடலூர் நோக்கி வந்த தமிழக, கேரள அரசு பஸ்கள், லாரிகள் மற்றும் 15-க்கும் மேற்பட்ட தனியார் வாகனங்கள் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் சிக்கியது. ஆனால் அதிர்‌‌ஷ்டவசமாக வாகனங்கள் மீது மண் மற்றும் பாறைகள் விழவில்லை. இதனால் அன்றைய தினம் தேவாலா போலீசார் விரைந்து சென்று பஸ்களில் இருந்த பயணிகள், வாகன உரிமையாளர்களை மீட்டு கூடலூர் அழைத்து வந்தனர். ஆனால் வாகனங்கள் அதே பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் கூடலூர் பகுதியில் மழை குறைந்து உள்ளது. இதனால் கூடலூர் எல்லையில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் நிலச்சரிவுகளுக்கு இடையே நிறுத்தப்பட்டு இருந்த அரசு பஸ்கள், வாகனங்களை மீட்கும் பணி நேற்று தொடங்கப்பட்டது. இதற்காக தமிழக எல்லையில் இருந்து பொக்லைன் எந்திரங்கள் கொண்டு சாலையில் குவிந்து கிடக்கும் மண்மேடுகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் ராணுவ வீரர்களும் ஈடுபட்டனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

கூடலூர் நோக்கி வந்த அரசு பஸ்கள், வாகனங்கள் மலைப்பாதையில் வரும்போது நிலச்சரிவில் சிக்கி கொண்டன. இதனால் பாதுகாப்பு கருதி அன்றைய தினம் பயணிகள் மட்டும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். ஆனால் சாலை முழுவதும் மண் நிறைந்து இருந்ததால் வாகனங்களை கொண்டு வர முடியாத நிலை இருந்தது. தற்போது மழை குறைந்து விட்டதால் கூடலூர் எல்லையில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அரசு பஸ்கள், வாகனங்களை மீட்பதற்காக பொக்லைன் எந்திரங்கள் கொண்டு மண் அகற்றப்படுகிறது.

இந்த பணி முடிந்தவுடன் பஸ்கள், வாகனங்கள் கூடலூருக்கு கொண்டு வரப்படும். மலைப்பாதையின் மீதமுள்ள பகுதியில் விழுந்து கிடக்கும் ராட்சத பாறைகளை கேரள அதிகாரிகள் அகற்ற வேண்டும். இதனால் போக்குவரத்து தொடங்க இன்னும் சில நாட்கள் ஆக வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதேபோல் கூடலூரில் இருந்து கோழிக்கோடு செல்லும் சாலையில் சேரங்கோடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. தொடர்ந்து சாலையும் விரிசல் அடைந்தது. இதனால் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் அரசு பஸ் போக்குவரத்தும் இதுவரை நடைபெறவில்லை. கடந்த 5 நாட்களாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளதால் கூடலூரில் இருந்து தேவர்சோலை, நெலாக்கோட்டை, பாட்டவயல் வழியாக சுல்தான்பத்தேரிக்கு செல்லும் சாலையில் மட்டுமே வாகனங்கள் இயக்கப்படுகிறது. இதனால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

Next Story