வெம்பக்கோட்டை அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து


வெம்பக்கோட்டை அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து
x
தினத்தந்தி 13 Aug 2019 10:15 PM GMT (Updated: 13 Aug 2019 9:43 PM GMT)

வெம்பக்கோட்டை அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் அறை இடிந்து தரைமட்டமானது.

தாயில்பட்டி,

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகேயுள்ள தாயில்பட்டி கோட்டையூரை சேர்ந்த முருகராஜ்(வயது55) என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை சாத்தூர் ரோட்டில் உள்ள பூசாரி நாயக்கன்பட்டி பகுதியில் அமைந்துள்ளது. நாக்பூர் உரிமம் பெற்ற இந்த ஆலையில் நேற்று மாலை பெரும்பாலான தொழிலாளர்கள் வேலை முடிந்து வீடுகளுக்கு சென்று விட்டனர். இந்த நிலையில் பட்டாசு ஆலை கழிவுகளை ஆலையின் அருகே குவித்து தீவைத்ததாக கூறப்படுகிறது. அப்போது பலத்த காற்று வீசியதால் தீப்பொறி பறந்து ஆலையில் பட்டாசுகளில் பவுடர் செலுத்தும் அறையில் விழுந்துள்ளது. இதைதொடர்ந்து அங்கிருந்த பவுடர் எரிந்து அந்த அறைமுழுவதும் தீ பரவியது. விபத்தில் அந்த அறை இடிந்து நாசமானது. தகவல் அறிந்ததும் வெம்பக்கோட்டை தீயணைப்பு நிலைய அதிகாரி காந்தையா தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்க போராடினர்.

சிவகாசியில் இருந்தும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். இந்த நிலையில் தீப்பிடித்த அறையில் தொழிலாளிகள் யாரேனும் சிக்கி இருக்கலாம் என்ற சந்தேகம் கிளம்பியதால் ஜே.சி.பி. எந்திரம் மூலம் இடிபாடுகளை அகற்றும் பணியும் உடனடியாக மேற்கொள்ளப்பட்டது. அதிர்ஷ்டவசமாக தொழிலாளி யாரும் உள்ளே சிக்கவில்லை என்பது முடிவில் தெரியவந்தது. அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

எனினும் இந்த பட்டாசு ஆலையில் தீப்பிடித்த தகவல் எட்டியதும் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானோர் அங்கு குவிந்ததோடு, வேலை முடிந்து திரும்பிக்கொண்டிருந்த மற்ற பட்டாசு ஆலை தொழிலாளர்களும் அங்கு திரண்டனர். இந்த சம்பவம் குறித்து வெம்பக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காளிமுத்து விசாரணை மேற்கொண்டார். விருதுநகர் அருகே நேற்று ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒரு தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்த நிலையில் இந்த சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story