காரைக்குடி அருகே சமூக ஆர்வலர் மர்ம சாவு: கொலை வழக்காக பதிவு செய்யக்கோரி உறவினர்கள் மறியல்


காரைக்குடி அருகே சமூக ஆர்வலர் மர்ம சாவு: கொலை வழக்காக பதிவு செய்யக்கோரி உறவினர்கள் மறியல்
x
தினத்தந்தி 13 Aug 2019 11:30 PM GMT (Updated: 13 Aug 2019 9:52 PM GMT)

காரைக்குடி அருகே சமூக ஆர்வலர் மர்மமான முறையில் மரணமடைந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்யக்கோரி அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சிவகங்கை,

காரைக்குடி அருகே கல்லல் பகுதியைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு(வயது 55). இவர் சமூக ஆர்வலராக இருந்து வந்தார். இந்தநிலையில் அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லல்-காரைக்குடி சாலையில் உள்ள மணிமுத்தாறு பாலம் பகுதியில் மர்மமான முறையில் காயங்களுடன் இறந்துகிடந்தார். இதையடுத்து அவரது உடலை போலீசார் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அப்போது அவருடைய உறவினர்கள் உடலை பரிசோதனை செய்யும் போது வீடியோ பதிவாக எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். ஆனால் அதற்கு முன்னதாகவே திருநாவுக்கரசின் உடல் பரிசோதனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் திருநாவுக்கரசின் மரணம் குறித்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்யக்கோரியும், இதுதொடர்பாக விசாரணை நடத்தி தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் அவரது உறவினர்கள் நேற்று சிவகங்கை-மானாமதுரை சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் திருமொழி, சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் பாலையா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் வீரபாண்டி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மறியல் குறித்து தகவல் அறிந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மங்களேசுவரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன், சப்-இன்ஸ்பெக்டர் ரஞ்சித், துணை தாசில்தார் சுந்தரி ஆகியோர் அங்கு வந்து மறியிலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அதன்பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story