பெங்களூரு மானேக்‌ஷா மைதானத்தில் நாளை சுதந்திரதின விழா; எடியூரப்பா தேசிய கொடி ஏற்றுகிறார்


பெங்களூரு மானேக்‌ஷா மைதானத்தில் நாளை சுதந்திரதின விழா; எடியூரப்பா தேசிய கொடி ஏற்றுகிறார்
x
தினத்தந்தி 13 Aug 2019 11:45 PM GMT (Updated: 13 Aug 2019 10:01 PM GMT)

பெங்களூரு மானேக்‌ஷா மைதானத்தில் நாளை (வியாழக்கிழமை) நடைபெறும் சுதந்திரதின விழாவில் முதல்-மந்திரி எடியூரப்பா கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றுகிறார். சுதந்திரதின விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

பெங்களூரு, 

சுதந்திர தின விழா நாளை (வியாழக்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

பெங்களூருவில் மாநகராட்சி சார்பில் மானேக்‌ஷா மைதானத்தில் சுதந்திரதின விழா கொண்டாடப்படுகிறது. இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பெங்களூரு மாநகராட்சி சார்பில் சுதந்திர தின விழா 15-ந் தேதி (நாளை) மானேக்‌ஷா அணிவகுப்பு மைதானத்தில் நடக்கிறது. காலை 9 மணிக்கு முதல்-மந்திரி எடியூரப்பா தேசிய கொடி ஏற்றுகிறார். அதன் பிறகு அவர் போலீசாரின் அணிவகுப்பை பார்வையிடுகிறார். பின்னர் அவர் சுதந்திர தின உரையாற்றுகிறார்.

இந்த உரைக்கு பிறகு அணிவகுப்பு நடைபெறுகிறது. அணிவகுப்பு மரியாதையை முதல்-மந்திரி ஏற்றுக்கொள்கிறார். இது முடிந்த பிறகு பல்வேறு பள்ளி குழந்தைகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதில் நாட்டுப்பற்றை பறைசாற்றும் பாடல்களுக்கு குழந்தைகள் நடனமாட உள்ளனர். இதில் 1,250 குழந்தைகள் பங்கேற்கின்றன. நிகழ்ச்சியின் இறுதியில் சிறந்த குழுக்களுக்கு பரிசுகள் வழங்கப்பட இருக்கின்றன.

இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களின் வசதிக்காக 11 ஆயிரத்து 500 இருக்கைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு சிறிய அளவில் குடிநீர், சிற்றுண்டி வசதியும் செய்யப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களாக இந்த மைதானத்தை விழாவுக்கு தயார்படுத்தி வருகிறோம். பாதுகாப்பு ஏற்பாடுகளும் தொடங்கப்பட்டுவிட்டன.

ஜாலியன் வாலாபாக் சம்பவத்தை சித்தரிக்கும் நிகழ்ச்சியும் இடம் பெறுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக மைதானத்தை சுற்றிலும் 50-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதிக எண்ணிக்கையில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயாராக நிறுத்தப்படும். தீயணைப்பு வாகனங்களும் நிறுத்தப்பட இருக்கிறது. அணிவகுப்பில் 34 குழுக்கள் இடம் பெறுகின்றன. இதில் மொத்தமாக 1,130 பேர் பங்கேற்கிறார்கள்.

இவ்வாறு மஞ்சுநாத் பிரசாத் கூறினார்.

சுதந்திரதின விழாவையொட்டி எடுக்கப்பட்டு உள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பெங்களூருவில் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை அசம்பாவித சம்பவங்கள் இன்றி அமைதியாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான முன்னெச்சரிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. சுதந்திர தினத்தன்று பெங்களூருவில் 2 கூடுதல் போலீஸ் கமிஷனர்கள், 11 துணை போலீஸ் கமிஷனர்கள், 23 உதவி போலீஸ் கமிஷனர்கள், 78 இன்ஸ்பெக்டர்கள், 175 சப்-இன்ஸ்பெக்டர்கள், 221 உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள்-போலீஸ்காரர்கள் என்று 1,108 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

இதுதவிர 77 பெண் போலீசாரும், சாதாரண உடையில் 150 போலீஸ்காரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். மொத்தம் 1,906 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். கர்நாடக ரிசர்வ் போலீஸ் படையினர், நகர ஆயுதப்படையினர், அதிரடிபடையினர், விரைவுப்படையினரும் போலீசாருடன் சேர்ந்து பாதுகாப்பு பணி செய்ய உள்ளனர். மத்திய உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. பாதுகாப்பு பணியில் ஈடுபடுபவர்கள் 24 பிரிவாக பிரிந்து பணி செய்ய உள்ளனர்.

மேலும் மைதானத்தை சுற்றி 50 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. முழு சோதனைக்கு பிறகே பொதுமக்கள் மைதானத்துக்குள் அனுமதிக்கப்பட உள்ளனர். சுதந்திர தின கொண்டாட்டத்தை காண வரும் பொதுமக்கள் மதுபானம், போதைப்பொருட்கள், கேமரா, வெடிப்பொருட்கள், கருப்பு கொடி உள்பட அனைத்து வகையான கொடிகளும் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. மைதானத்தில் ‘செல்பி‘ எடுக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த முறை கோவா போலீசாரும் அணிவகுப்பில் கலந்து கொள்ள உள்ளனர். கர்நாடகத்தை சேர்ந்த போலீசார் மராட்டியம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் நடைபெறும் அணிவகுப்பில் கலந்து கொள்ள உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

கர்நாடகத்தில் தற்போது மழை வெள்ள சேதம் ஏற்பட்டு உள்ளதால் இந்த ஆண்டு சுதந்திரதின விழாவை எளிமையாக கொண்டாட அரசு முடிவு செய்து உள்ளது. தற்போது முதல்-மந்திரி மட்டுமே உள்ளார். மந்திரிகள் யாரும் பதவி ஏற்காத நிலையில் மாவட்டங்களில் உயர் அதிகாரிகள் தேசிய கொடி ஏற்ற அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. வழக்கமாக மாவட்டங்களில் மந்திரிகள் தேசிய கொடி ஏற்றுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story