இலுப்பூரில் மாவட்ட உரிமையியல், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் திறப்பு


இலுப்பூரில் மாவட்ட உரிமையியல், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் திறப்பு
x
தினத்தந்தி 14 Aug 2019 10:30 PM GMT (Updated: 14 Aug 2019 5:40 PM GMT)

இலுப்பூரில் மாவட்ட உரிமையியல், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை நீதிபதி, அமைச்சர் ஆகியோர் திறந்து வைத்தனர்.

அன்னவாசல்,

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, அறந்தாங்கி, திருமயம், ஆலங்குடி உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் நிர்வாக வசதிக்காக இலுப்பூரில் நீதிமன்றம் திறக்க வேண்டும் என்று சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, இலுப்பூரில் நீதிமன்றம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வந்தது. அதன்படி, இலுப்பூரில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் திறப்பு விழா நடந்தது.

விழாவில் மாவட்ட முதன்மை நீதிபதி இளங்கோவன் மற்றும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் தலைமை தாங்கி நீதி மன்றத்தை திறந்து வைத்தனர். இதைத் தொடர்ந்து மாவட்ட முதன்மை நீதிபதி நீதிமன்ற நடவடிக்கைகளை முறைப்படி தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இதில் மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி, மாவட்ட கூட்டுறவு சங்க தலைவர் சின்னத்தம்பி, முன்னாள் பேரூராட்சி தலைவர் குரு.ராஜாமன்னார் மற்றும் அரசு அதிகாரிகள், அலுவலர்கள் அரசியல் கட்சி பிரமுகர்கள், வக்கீல்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

நீர்நிலைகளும் தூர்வாரப்படும்

முன்னதாக இலுப்பூர் அருகே உள்ள சென்னப்ப நாயக்கன்பட்டியில் ஊரக வளர்ச்சி துறையின் பராமரிப்பில் உள்ள குளம் தூர்வாரும் பணியை குடிமராமத்து திட்டத்தின் கீழ் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் குடி மராமத்து திட்டத்தின் கீழ் ரூ.1,250 கோடி நிதி ஒதுக்கப்பட்டு நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 650 ஏரி, கண்மாய்கள் மற்றும் சிறு குளங்கள் குடிமராமத்து திட்டத்தின் கீழ் போர்க்கால அடிப்படையில் தூர்வாரப்பட்டு வருகிறது. வருகின்ற மழைக்காலத்திற்கு முன்பாக அனைத்து நீர்நிலைகளும் தூர்வாரப்படும்.

மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ள நிலையில், முதல்-அமைச்சர் அறிவித்து உள்ளது போல் கடைமடை பகுதியின் கடைசி வரையில் முறையாக தண்ணீர் வினியோகம் வழங்கப்படும். மேட்டூரில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள நீர் காவிரி டெல்டா மாவட்டங்களின் கடைமடை பகுதியான புதுக்கோட்டை மாவட்டம், நாகுடிக்கு வந்து சேரும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த பகுதிகளில் உள்ள வரத்து வாரிகள், ஷெட்டர்கள் ஆகியவை சீர் செய்யப்பட்டுள்ளதால் தங்கு தடையின்றி காவிரி நீர் வந்து சேரும் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறினார்.

மோட்டார் பொருத்தப்பட்ட வாகனங்கள்

அன்னவாசல் மற்றும் இலுப்பூர் பேரூராட்சியில் திட கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பைகளை சேகரிக்கும் மோட்டார் பொருத்தப்பட்ட வாகனங்களை அமைச்சர் வழங்கினார். இதில் பேரூராட்சி செயல் அலுவலர்கள் அன்னவாசல் ஆசாராணி, இலுப்பூர் பரமேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அன்னவாசல் அரசு மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் தனிதிறன் மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை அமைச்சர் வழங்கி சிறப்புரை ஆற்றினார். இதில் மாவட்ட கலெக்டர் உமாமேஸ்வரி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஜெயலட்சுமி வருவாய் கோட்டாட்சியர் டெய்சிகுமார், கூட்டுறவு சங்க தலைவர் ராமசாமி, ஆத்மாகுழு தலைவர் சாம்பசிவம், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சாலைமதுரம், ரவிக்குமார், அப்துல்அலி, முத்தமிழ்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story