சுதந்திர தினத்தையொட்டி காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை கலெக்டர் பார்வையிட்டார்


சுதந்திர தினத்தையொட்டி காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை கலெக்டர் பார்வையிட்டார்
x
தினத்தந்தி 14 Aug 2019 10:45 PM GMT (Updated: 14 Aug 2019 8:10 PM GMT)

வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தினத்தையொட்டி நடந்த காவல்துறை அணிவகுப்பு ஒத்திகையை கலெக்டர் சண்முகசுந்தரம் பார்வையிட்டார்.

வேலூர்,

நாடு முழுவதும் இன்று (வியாழக்கிழமை) சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செய்து வருகின்றன. வேலூர் மாவட்டம் சார்பில் வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தின விழா நடக்கிறது.

காலை 9.10 மணிக்கு கலெக்டர் சண்முகசுந்தரம் தேசிய கொடியை ஏற்றி வைத்து, போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்கிறார். பின்னர் அவர், சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவித்தல், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இதையடுத்து பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

அத்துடன் பல்வேறு அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு கலெக்டர் பாராட்டு சான்றிதழ் வழங்குகிறார். விழாவில் வேலூர் சரக டி.ஐ.ஜி. காமினி, போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் மற்றும் அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொள்கின்றனர்.

சுதந்திர தினத்தையொட்டி நேற்று நேதாஜி விளையாட்டு மைதானத்தில் காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை நடந்தது. இதில், 100-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர். இதனை மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் பார்வையிட்டார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் பாலசுப்பிரமணியன், விஜயக்குமார் ஆகியோர் மேற்பார்வையில் 1,450 போலீசார் வேலூர் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். குறிப்பாக பொதுமக்கள் அதிகளவு வருகை தரும் வேலூர் கோட்டை, வழிபாட்டு தலங்களில் அசம்பாவிதங்களை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையொட்டி காலை 11 மணி அளவில் வேலூர் கோட்டை வளாகம் மற்றும் கொத்தளம், காந்திசிலை, ஜலகண்டஸ்வேரர் கோவில் ஆகிய இடங்களில் வெடிகுண்டு தடுப்புப்பிரிவு போலீசார் மோப்ப நாய் கொண்டு தீவிர சோதனை மேற்கொண்டனர்.

காட்பாடி, அரக்கோணம், ஜோலார்பேட்டை உள்பட பல்வேறு ரெயில் நிலையங்களிலும் பயணிகளின் உடைமைகள் ‘மெட்டல் டிடெக்டர்’ கருவிகள் மூலம் சோதனை செய்யப்படுகின்றன. பாதுகாப்பு பணி நாளை (வெள்ளிக்கிழமை) வரை நீடிக்கும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story