நியூட்ரினோ திட்டத்தால் தென் தமிழகம் பாலைவனமாகும் - குந்தாரப்பள்ளியில் வைகோ பேட்டி


நியூட்ரினோ திட்டத்தால் தென் தமிழகம் பாலைவனமாகும் - குந்தாரப்பள்ளியில் வைகோ பேட்டி
x
தினத்தந்தி 14 Aug 2019 11:00 PM GMT (Updated: 14 Aug 2019 9:55 PM GMT)

நியூட்ரினோ திட்டத்தால் தென் தமிழகம் பாலை வனமாகும் என குந்தாரப்பள்ளியில் வைகோ கூறினார்.

குருபரப்பள்ளி,

கிருஷ்ணகிரி அருகே உள்ள குந்தாரப்பள்ளியில் மாவட்ட ம.தி.மு.க. சார்பில் நினைவேந்தல் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பாலமுரளி தலைமை தாங்கினார். இதில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மறைந்த கட்சி உறுப்பினர்களின் உருவப்படத்தை திறந்து வைத்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வைகோ கூறியதாவது:- அண்ணாவின் பிறந்த நாள் விழா ம.தி.மு.க. மாநாடு சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் செப்டம்பர் 15-ந் தேதி நடைபெறுகிறது. இந்த மாநாட்டை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இதில் சில முக்கிய அறிவிப்பு செய்ய உள்ளோம்.

விடுதலைப்புலிகளின் தடையை நீக்க சொல்லி நான் தொடர்ந்து போராடி வருகிறேன். தமிழ்நாட்டில் நடைபெறுகிற ஆட்சி ஒரு அடக்குமுறை ஆட்சியாக இருக்கிறது. இந்த அரசு போலீசை வைத்து மனித உரிமைகளை நசுக்கலாம் என்று கருதுகிறது. அதனால் தான் திருமுருகன் காந்தி மீது 38 வழக்கு போட்டிருக்கிறார்கள். இந்த வழக்குகளை வாபஸ் வாங்க வேண்டும். நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து பிரதமரிடம் நேரடியாக மனு கொடுத்து வாதாடி இருக்கிறேன். நியூட்ரினோ திட்டத்தால் தென் தமிழகம் பாலைவனமாகும்.

காஷ்மீர் பிரச்சினை சர்வதேச பிரச்சினை ஆகிவிட்டது. மத்திய அரசு 370-வது பிரிவை நீக்கியதும், 35-ஐ நீக்கியதும் குளவிக்கூட்டில் கை வைத்த வேலை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story