பெருமத்தூர் மாரியம்மன் கோவில் திருவிழாவை நடத்தக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு


பெருமத்தூர் மாரியம்மன் கோவில் திருவிழாவை நடத்தக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு
x
தினத்தந்தி 17 Aug 2019 11:00 PM GMT (Updated: 17 Aug 2019 6:47 PM GMT)

பெருமத்தூர் மாரியம்மன் கோவில் திருவிழாவை நடத்தக்கோரி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா பெருமத்தூர் கிராமத்தில் வசிக்கும் ஒரு சமுதாயத்தை சேர்ந்த மக்கள் நேற்று காலை பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து ஒரு மனு கொடுத்தனர். அதில், எங்கள் ஊரில் உள்ள மாரியம்மன் கோவில் இந்து அறநிலையத்துறைக்கு கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவை ஆண்டுதோறும் ஊர் பொதுமக்கள் ஒன்றுகூடி நடத்துவது வழக்கம். ஆனால் தற்போது எங்கள் கிராமத்தில் வசிக்கும் மற்றொரு சமுதாய மக்கள், எங்கள் சமுதாய மக்களை புறக்கணித்து விட்டு மாரியம்மன் கோவில் திருவிழாவை நடத்துவதற்கு முயற்சித்து வருகின்றனர். இது தொடர்பாக ஏற்கனவே இந்து அறநிலையத்துறைக்கும், மங்களமேடு போலீசாருக்கும் புகார் கொடுக்கப்பட்டது. அவர்கள் நடத்திய விசாரணையில், ஊர் பொதுமக்கள் ஒன்றுகூடினால் மட்டுமே கோவில் திருவிழாவை நடத்த முடியும் என்றனர்.

சட்டம்- ஒழுங்கு பிரச்சினை

இந்நிலையில் அந்த சமுதாய மக்களில் சிலர் கடந்த 16-ந் தேதி ஆயுதங்களுடன் வந்து 18-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற 20-ந் தேதி வரை திருவிழா நடத்தப்படும் என்று தண்டோரா மூலம் தெரிவித்துள்ளனர். திருவிழாவில் எங்கள் சமுதாய மக்கள் கலந்து கொண்டால் கொலை செய்யப்படுவார்கள் என்று மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர். இதனால் பெருமத்தூர் கிராமத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான பெருமத்தூர் மாரியம்மன் கோவில் திருவிழாவினை ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்று கூடி நடத்த வழிவகை செய்ய வேண்டும் என்றும், பிரச்சினையை தூண்டிவிடும் அந்த சமுதாயத்தை சேர்ந்த நபர்கள் மீது மாவட்ட நிர்வாகம் போலீசார் மூலம் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர். மேலும் அவர்கள் இது தொடர்பான மனுவினை பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் கொடுத்து விட்டு சென்றனர்.

Next Story