உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பள்ளிசாரா பணிகளை வழங்கக்கூடாது செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்


உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பள்ளிசாரா பணிகளை வழங்கக்கூடாது செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 17 Aug 2019 10:15 PM GMT (Updated: 17 Aug 2019 7:20 PM GMT)

உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பள்ளிசாரா பணிகளை வழங்கக்கூடாது என செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கிருஷ்ணராயபுரம்,

கரூர் மாவட்ட தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் உடற்கல்வி இயக்குனர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் மாயனூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் மகாமுனி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சதீஷ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பல்வேறு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது.

இந்த சூழலில் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு போக்குவரத்தை சீர் செய்யும் பணி வழங்கியிருக்கிறார்கள். அரசு பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்கள் மாணவர்களை கண்காணித்தல், அவர்களை நல்வழிப்படுத்துதல் உள்ளிட்டவற்றிலும் ஈடுபடுகின்றனர்.

போராட்டம்

எனவே உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பள்ளி சாரா பணிகளை வழங்குவதை நிறுத்திட வேண்டும். இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், பள்ளிக்கல்வி செயலர், பள்ளிக்கல்வி இயக்குனர் ஆகியோரை சந்தித்து உடற்கல்வி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பிற பணிகளை மறுபரிசீலனை செய்வது தொடர்பாக வலியுறுத்துவது, அதன் பின்னரும் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் உடற்கல்வி ஆசிரியர்களையும், பெற்றோர்களையும் ஒருங்கிணைத்து அடுத்தகட்ட போராட்டத்திற்கு தயார் ஆவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாவட்ட பொருளாளர் மணிமாறன், மாநில செயற்குழு உறுப்பினர் மலையாளம், மாவட்ட பொறுப்பாளர்கள் ரவி, ஜெயபால், லதா, கவுசல்யா, உடற்கல்வி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story