திருச்சி காந்தி மார்க்கெட்டில் துப்புரவு தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்தம்


திருச்சி காந்தி மார்க்கெட்டில் துப்புரவு தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 17 Aug 2019 11:00 PM GMT (Updated: 17 Aug 2019 7:29 PM GMT)

சம்பளம் வழங்கப்படாததை கண்டித்து திருச்சி காந்தி மார்க்கெட்டில் துப்புரவு தொழிலாளர்கள் திடீரென வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில் அமர்ந்து தர்ணா செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி,

திருச்சி காந்திமார்க்கெட்டில் 50 துப்புரவு தொழிலாளர்கள் 3 ஷிப்டுகளாக சுழற்சி முறையில் பணியாற்றி வருகிறார்கள். இந்தநிலையில் காலியாக உள்ள துப்புரவு பணியிடங்களுக்கு ஆட்களை நியமிக்காததால் நாளுக்கு நாள் அவர்களுக்கு வேலைப்பளு அதிகரித்து வருகிறது. மேலும் அவர்களுக்கு 5-ந்தேதி வழங்கப்பட வேண்டிய சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் கூடுதலாக பணியாளர்களை நியமிக்கக்கோரியும், இந்த மாதம் 5-ந்தேதி வழங்க வேண்டிய சம்பளத்தை உடனே வழங்கக்கோரியும் காந்தி மார்க்கெட்டில் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்கள் நேற்று காலை திடீரென வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அத்துடன் அவர்கள், அரியமங்கலம் கோட்ட அலுவலகத்துக்கு சென்று தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தரையில் அமர்ந்து தர்ணாவிலும் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு

இதையடுத்து மாநகராட்சி உதவி ஆணையாளர் திருஞானம், சி.ஐ.டி.யு. துப்புரவு தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் மாறனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தொழிலாளர்களின் பணிநேரத்தை அடிக்கடி மாற்ற மாட்டோம் என்றும், காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், உடனே சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உதவி ஆணையாளர் உறுதி அளித்தார்.

இதையடுத்து துப்புரவு தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர். தொழிலாளர்களின் திடீர் போராட்டத்தால் காந்திமார்க்கெட்டில் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை துப்புரவு பணிகள் பாதிக்கப்பட்டன.

Next Story