திருச்சி என்.ஐ.டி.யில் பள்ளி மாணவர்களுக்கு ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு பயிற்சி கலெக்டர் தொடங்கி வைத்தார்


திருச்சி என்.ஐ.டி.யில் பள்ளி மாணவர்களுக்கு ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு பயிற்சி கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 17 Aug 2019 10:30 PM GMT (Updated: 17 Aug 2019 7:35 PM GMT)

திருச்சி என்.ஐ.டி.யில் பள்ளி மாணவர்களுக்கு ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு பயிற்சியை கலெக்டர் சிவராசு தொடங்கி வைத்தார்.

திருச்சி,

திருச்சி என்.ஐ.டி.யில் ‘இக்னைட்’ மாணவர் அமைப்பு சார்பில் திருச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு பயிற்சி தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவுக்கு கலெக்டர் சிவராசு தலைமை தாங்கி பயிற்சியை தொடங்கிவைத்தார்.

மேலும் மாணவ-மாணவிகளுக்கு புத்தகங்களை வழங்கி பேசுகையில், மாணவர்கள் தங்கள் தாழ்வு மனப்பான்மையை நீக்க வேண்டும். தாழ்வு மனப்பான்மை தான் தோல்வியின் முதல் படி. மாணவர்கள் நிறைய புத்தங்களை படித்து அடிப்படை அறிவினை வளர்த்துக்கொள்ள வேண்டும். இந்த பயிற்சியை மாணவர்கள் நல்ல முறையில் பெற்று பயன்பெற வேண்டும்” என்றார்.

அனைத்து வசதிகளும்...

விழாவில் என்.ஐ.டி. இயக்குனர் மினி ஷாஜி தாமஸ் பேசுகையில், ‘மாணவர்கள் இந்த பயிற்சியில் நன்றாக படிக்க வேண்டும். பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளின் வளர்ச்சிக்காக சிறு தியாகங்களை செய்ய வேண்டும். பயிற்சி பெறும் மாணவர்களுக்கான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்’ என்றார். மாணவர் அமைப்பின் நிறுவனர் சஞ்சீவ் பேசுகையில், ‘கடந்த 2017-ம் ஆண்டு நடந்த பயிற்சியில் 13 பேர் ஜே.இ.இ. நுழைவுத்தேர்விலும், 2 பேர் நீட் தேர்விலும் வெற்றி பெற்றனர். கடந்த 2018-ம் ஆண்டு நடந்த பயிற்சியில் 40 பேர் ஜே.இ.இ. நுழைவுத்தேர்விலும், 2 பேர் நீட் தேர்விலும் தேர்ச்சி பெற்றனர். பயிற்சி பெற்ற மாணவி ஜான்சி என்பவருக்கு என்.ஐ.டி.யில் படிக்க இடம் கிடைத்துள்ளது’ என்றார்.

தொடக்க விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சாந்தி, பதிவாளர் பழனிவேல் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னதாக பேராசிரியர் வெங்கட கிருத்திகா வரவேற்று பேசினார். முடிவில் மாணவர் அமைப்பின் தலைவர் சரண்பத்ரேஷ் நன்றி கூறினார். மாணவர்களுக்கு பயிற்சி என்.ஐ.டி.யில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story