விவசாயிகளின் தேவைக்கேற்ப கூடுதலாக தண்ணீர் திறக்கப்படும் அமைச்சர் காமராஜ் பேட்டி


விவசாயிகளின் தேவைக்கேற்ப கூடுதலாக தண்ணீர் திறக்கப்படும் அமைச்சர் காமராஜ் பேட்டி
x
தினத்தந்தி 17 Aug 2019 10:45 PM GMT (Updated: 17 Aug 2019 7:57 PM GMT)

விவசாயிகளின் தேவைக்கேற்ப கூடுதலாக தண்ணீர் திறக்கப்படும் என அமைச்சர் காமராஜ் கூறினார்.

திருவாரூர்,

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் 20-வது அனைத்து மண்டல பணியாளர்களுக்கு இடையிலான மாநில அளவிலான விளையாட்டு போட்டி திருவாரூர் மாவட்ட உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது. போட்டிக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குனர் சுதாதேவி தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் ஆனந்த் முன்னிலை வகித்தார். போட்டியினை உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

விலையில்லா அரிசி

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் 20 ஆண்டுகளாக மண்டலங்களுக்கு இடையிலான மாநில அளவிலான விளையாட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் பணியாளர்களுக்கிடையே ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை ஊக்குவிக்கும் வகையிலும், பணியாளர்களின் மன வலிமையை அதிகரிக்கவும், மன அழுத்தத்தை குறைக்கும் வகையிலும் போட்டிகள் நடத்தப்படுகிறது.

தமிழகத்தில் 2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா அரிசி வழங்கும் வாய்ப்பை தமிழ்நாடு நுகர் பெருள் வாணிப கழகம் பெற்றுள்ள துறையாக விளங்குகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தையும், விலையில்லா அரிசி வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. குடிமராமத்து மற்றும் தூர்வாரும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

மேலும் கல்லணை மற்றும் முக்கொம்பு அணைகள் திறக்கப்பட்டுள்ளன. விவசாயிகளின் தேவைக்கேற்ப கூடுதலாக தண்ணீர் திறக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பொது மேலாளர் சிவசவுந்திரவள்ளி, மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள், நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் மணிவண்ணன், உதவி கலெக்டர் முருகதாஸ், மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகுவேந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story