மதுரை மாவட்டத்தை 2 ஆக பிரிக்க முடிவா? அமைச்சர் செல்லூர் ராஜூ பதில்


மதுரை மாவட்டத்தை 2 ஆக பிரிக்க முடிவா? அமைச்சர் செல்லூர் ராஜூ பதில்
x
தினத்தந்தி 17 Aug 2019 11:00 PM GMT (Updated: 17 Aug 2019 10:54 PM GMT)

மதுரை மாவட்டத்தை 2 ஆக பிரிக்க முடிவா என்ற கேள்விக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ பதில் அளித்துள்ளார்.

மதுரை,

மதுரை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் 4 ஆயிரத்து 262 மாணவ-மாணவிகளுக்கு ரூ.4 கோடியே 43 லட்சம் மதிப்பில் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் விழா நடந்தது. மாநகராட்சி கமிஷனர் விசாகன், வெங்கடேசன் எம்.பி. ஆகியோர் தலைமை தாங்கினர். அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் இதுவரை 42 லட்சத்து 97 ஆயிரத்து 125 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் 1 லட்சத்து 85 ஆயிரம், மாநகராட்சியில் மட்டும் 19 ஆயிரத்து 372 மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் முயன்றால் முடியாதது ஏதும் இல்லை. மதுரையை தூய்மையான நகராக மாற்றுவதற்காக மாநகராட்சி மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு மாணவர்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். மதுரை எம்.பி. வெங்கடேசன் சிறந்த எழுத்தாளர். மதுரையை பற்றி அவர் சிறப்பாக நூல் எழுதி உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மதுரை மண்டலத்திற்கு வழங்கப்பட்ட புதிய 5 பஸ்களின் சேவையை அமைச்சர் செல்லூர் ராஜூ ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கி வைத்தார். இந்த விழாவில் கலெக்டர் ராஜசேகர், மாநகராட்சி கமிஷனர் விசாகன், அரசு போக்குவரத்துக் கழக மண்டல மேலாண்மை இயக்குனர் முருகேசன், துணை மேலாளர்கள் ராதாகிருஷ்ணன், அறிவானந்தம், உதவி மேலாளர் யுவராஜ்பாண்டியன், உதவி பொறியாளர் ராஜவேல், துணை மேலாளர் (மேற்கு) சக்திவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த பஸ்கள் ராமேசுவரம், ஈரோடு, கோவை ஆகிய ஊர்களுக்கு இயக்கப்படுகிறது.

நிகழ்ச்சிக்கு பின் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறும்போது, “கமல்ஹாசன் சினிமாவில் தான் முதல்-அமைச்சராக வர முடியும். அவரை மக்கள் ஒரு நடிகராக தான் இன்னும் பார்க்கின்றனர். அவரை எம்.ஜி.ஆருடன் ஒப்பிட கூடாது.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு இருந்த மக்கள் செல்வாக்கு யாருக்கும் இல்லை. நிர்வாக வசதிக்காக மாவட்டங்களை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரித்து வருகிறார். மதுரையையும் 2 மாவட்டமாக பிரிப்பது குறித்து முதல்-அமைச்சர் தான் முடிவு எடுப்பார்.

மதுரை நகரில் குற்றச்சம்பவங்களை தடுக்க போலீஸ் நிலையங்கள் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்“ என்றார்.

Next Story