விடிய விடிய வெளுத்து வாங்கிய மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு


விடிய விடிய வெளுத்து வாங்கிய மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
x
தினத்தந்தி 17 Aug 2019 11:15 PM GMT (Updated: 17 Aug 2019 11:13 PM GMT)

புதுவையில் விடிய விடிய மழை வெளுத்து வாங்கியது. இந்த தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

புதுச்சேரி,

புதுவையில் இந்த ஆண்டு பருவமழை சரிவர பெய்யாத நிலையில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யத் தொடங்கியது.

விடிய விடிய வெளுத்து வாங்கிய மழை நேற்று காலை வரை பெய்தது. மழை காரணமாக சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. புஸ்சி வீதி உள்ளிட்ட பல்வேறு தாழ்வான வீதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது.

புதுச்சேரியின் சுற்றுவட்டார பகுதிகளான அரியாங்குப்பம், தவளக்குப்பம், பாகூர், வில்லியனூர், திருக்கனூர், திருபுவனை, காலாப்பட்டு ஆகிய இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. தாழ்வான குடியிருப்பு பகுதியில் மழைநீர் சூழ்ந்ததால், அப்பகுதி மக்கள் அவதிப்பட்டனர். சில குடியிருப்பு பகுதியில் மண் சாலைகள் சேறும் சகதியுமாக மாறியதால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

நேற்று காலையில் மழை விட்ட போதிலும் மேக கூட்டங்கள் திரண்டு காணப்பட்டது. அவ்வப்போது சாரல் தூறிக்கொண்டே இருந்தது. இதனால் இதமான சூழல் நிலவியது. மாலை 3 மணிக்கு பிறகே சூரியன் தலைகாட்டியது. புதுவைக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள், குடைகளை பிடித்தபடி கடற்கரை அழகை ரசித்ததை காண முடிந்தது.

தொடர் மழை காரணமாக புதுவையில் நேற்று விடுமுறை நாளாக இருந்தபோதிலும் ரோட்டில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. குழந்தைகளும் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருந்தனர். மொத்தத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று இரவு 10.30 மணிக்கு மீண்டும் புதுவையில் மழை பெய்யத்தொடங்கியது. இந்த மழை விட்டு விட்டு நள்ளிரவு வரை பெய்தது.

Next Story