மீஞ்சூர் அருகே பரிதாபம் வெந்நீர் கொட்டியதில் 2 குழந்தைகள் சாவு


மீஞ்சூர் அருகே பரிதாபம் வெந்நீர் கொட்டியதில் 2 குழந்தைகள் சாவு
x
தினத்தந்தி 18 Aug 2019 11:00 PM GMT (Updated: 18 Aug 2019 7:17 PM GMT)

மீஞ்சூர் அருகே பாத்திரம் தவறி குழந்தைகள் மீது வெந்நீர் கொட்டியதில் 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மீஞ்சூர்,

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள காட்டூர் காலனியை சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி அனிதா (வயது 27). இவர்களுக்கு ஸ்ரீதர்ஷித் (4), ஜோஷித் (2) என 2 ஆண் குழந்தைகள் இருந்தனர். மனோகரன் விபத்தில் இறந்து விட்டார்.

அனிதா தனது குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 10-ந் தேதி காலை குழந்தைகள் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தனர். அப்போது, அனிதா குளிப்பதற்காக பாத்திரத்தில் வெந்நீர் எடுத்து சென்றார். எதிர்பாராதவிதமாக பாத்திரம் தவறி கீழே விழுந்தது. இதில் வெந்நீர் குழந்தைகள் மீது கொட்டியது.

உடனே குழந்தைகள் வலியால் அலறி துடித்தன. அதிர்ச்சி அடைந்த அனிதா பலத்த காயம் அடைந்த 2 குழந்தைகளையும் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தார். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

அங்கு 2 குழந்தைகளுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி குழந்தைகள் ஸ்ரீதர்ஷித், ஜோஷித் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து காட்டூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Next Story