ஆசிரியர்கள் மடிக்கணினியை பயன்படுத்தி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த வேண்டும்


ஆசிரியர்கள் மடிக்கணினியை பயன்படுத்தி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த வேண்டும்
x
தினத்தந்தி 18 Aug 2019 11:00 PM GMT (Updated: 18 Aug 2019 8:20 PM GMT)

ஆசிரியர்கள் மடிக்கணினியை பயன்படுத்தி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி விஜயலட்சுமி தெரிவித்து உள்ளார்.

புதுக்கோட்டை,

அரசு மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் புதியபாட திட்டத்தின்படி தொழில்நுட்பத்துடன் கூடிய பாடப்புத்தகம் மற்றும் பாடப்புத்தகத்தில் உள்ள கியூஆர் கோடினை பயன்படுத்தி கற்பித்தலை சிறப்பாக்கிடவும், இணையதளத்தினை பயன்படுத்தி மாணவர்களுக்கு கற்பிக்கவும் 11 மற்றும் 12-ம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களின் பயன்பாட்டிற்காக விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலக வளாகத்தில் உள்ள தேர்வுக்கூட அரங்கில் நடைபெற்றது.

மாணவர்களின் கற்பித்தலுக்காக...

இதில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி விஜயலட்சுமி கலந்து கொண்டு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கி பேசுகையில், கல்வித் தகவல் மேலாண்மை முறைமையில் அவ்வப்போது பள்ளியில் நடைபெறும் கற்றல், கற்பித்தல் மற்றும் அலுவலகம் சார்ந்த நிகழ்வுகளை மடிக் கணினியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில் முதுகலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் மடிக்கணினியை பயன் படுத்தி வளர்ந்து வரும் அறிவியல் முன்னேற்றத்திற்கு ஏற்ப மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் மடிக்கணினிகளை மாணவர்களின் கற்பித்தலுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றார். இதில் மாவட்டக்கல்வி அதிகாரிகள் ராகவன், ராஜேந்திரன் உள்பட பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story