திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் மின்விசிறி கழன்று விழுந்து பெண் காயம்


திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் மின்விசிறி கழன்று விழுந்து பெண் காயம்
x
தினத்தந்தி 19 Aug 2019 11:15 PM GMT (Updated: 19 Aug 2019 5:21 PM GMT)

திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் மின்விசிறி கழன்று பெண் மீது விழுந்ததில் காயமடைந்தார்.

திருச்சி,

திருச்சி அருகே சர்க்கார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அனுஜெயஸ்ரீ (வயது 24). மாற்றுத்திறனாளியான இவர் உடல் நலக்குறைவு காரணமாக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆஸ்பத்திரியில் பழைய கட்டிடத்தில் எப். எம்.3-வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு அனுஜெயஸ்ரீக்கு உதவியாக அவரது தாய் ஜேம்ஸ் மேரி (54) உடன் இருந்து கவனித்து வருகிறார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று பகலில் ஆஸ்பத்திரியில் அனுஜெயஸ்ரீக்கு சாப்பாடு கொடுத்த பின், படுக்கையில் அமர்ந்து ஜேம்ஸ் மேரி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது மேலே சுழன்று கொண்டிருந்த மின்விசிறி திடீரென கழன்று ஜேம்ஸ் மேரியின் மீது விழுந்தது. இதில் அவரது தலையின் பின்பக்கம் மற்றும் தோள்பட்டையில் உள் காயம் ஏற்பட்டது. மின்விசிறி கழன்று விழுந்ததைக் கண்டு சக நோயாளிகள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து உடனடியாக அங்கிருந்த ஊழியர்களிடம் தகவல் தெரிவித்தனர்.

மின்விசிறி விழுந்ததில் காயமடைந்த ஜேம்ஸ் மேரி உடனடியாக முதல் உதவி சிகிச்சை பெற்றார். அதன்பிறகு அவர் மேல் சிகிச்சை எதுவும் பெறவில்லை. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக ஜேம்ஸ் மேரிக்கு ஏற்பட்ட உள் காயத்தில் வலி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ஆஸ்பத்திரியில் ஸ்கேன் எடுத்து பார்க்க அங்கிருந்த டாக்டர்களை அணுகினார்.

அப்போது ‘அட்மிஷன்’ போட்டபின், ரூ.500 கட்டணம் செலுத்தி ஸ்கேன் எடுத்து கொள்ளலாம் என அவர்கள் கூறியிருக்கின்றனர். ஆனால் தன்னிடம் பணம் இல்லை என்றும், மேலும் ஆஸ்பத்திரியில் நடந்த சம்பவத்திற்கு நிர்வாகம் தரப்பில் ஸ்கேன் எடுத்து பார்க்க நடவடிக்கை எடுக்காமல், தன்னிடம் பணம் கேட்டதை எண்ணி அதிருப்தி அடைந்தார்.

இதற்கிடையில் இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர் ஆஸ்பத்திரி அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யுமாறு கூறினார்.

இதைத்தொடர்ந்து ஜேம்ஸ்மேரிக்கு அரசு ஆஸ்பத்திரியில் ஸ்கேன் எடுத்து பார்க்க நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது. மின்விசிறி விழுந்த வார்டை டீன் (பொறுப்பு) ஆர்சியா பேகம் பார்வையிட்டார். மேலும் அங்கு பழைய மின் விசிறிகளை அகற்ற ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்.

Next Story