தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரசை பிரிக்க முடியாது திருநாவுக்கரசர் எம்.பி. பேட்டி


தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரசை பிரிக்க முடியாது திருநாவுக்கரசர் எம்.பி. பேட்டி
x
தினத்தந்தி 19 Aug 2019 11:00 PM GMT (Updated: 19 Aug 2019 7:33 PM GMT)

தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரசை பிரிக்க முடியாது என்று திருநாவுக்கரசர் எம்.பி. கூறினார்.

திருச்சி,

பிரதமர் மோடியின் செயல்பாடுகள் பற்றி முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறியது அவரது கருத்து. ஒவ்வொருவரின் பார்வையிலும் ஒரு கருத்து வெளிப்படும். அந்த வகையில் மக்கள் தொகை பெருக்கத்தினால் ஏற்படும் பொருளாதார நெருக்கடி பற்றி அவர் கூறி இருக்கிறார். அப்படி ஒரு கருத்து சொல்வதற்கு அவருக்கு உரிமை உண்டு. கம்யூனிஸ்டு தலைவர் முத்தரசன் கூறிய கருத்தும் அதுபோன்றது தான். தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரசை பிரிக்க முடியாது.

கருத்து மோதல்

வைகோ கூறிய கருத்துக்கு முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதில் அளித்த போது கருத்து மோதல் ஏற்பட்டது. அப்போது தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலையிட்டு 2 பேரிடமும் பேசி இந்த பிரச்சினைக்கு முடிவு கட்டினார். நானும் வைகோவும் நேற்று (அதாவது நேற்று முன்தினம்) மதுரையில் ஒன்றாக தான் விமான நிலையத்தில் இருந்து வந்தோம். வைகோவுக்கு திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டது. அவர் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன். தி.மு.க. கூட்டணியில் இப்போது எந்த கருத்து மோதலும் இல்லை, குழப்பமும் இல்லை.

பிரதமர் மோடியும், அமித்ஷாவும் கிருஷ்ணர்- அர்ஜுனன் போன்றவர்கள் என ரஜினிகாந்த் கூறியது பற்றி கருத்து கேட்கிறார்கள். அவர் அப்படி கூறி பல நாட்கள் ஆகி விட்டது. இப்போது நடப்பது மகாபாரதம் அல்ல. இது நவீன யுகம். மகாபாரதத்துக்கும், நவீன அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

ஜங்ஷன் மேம்பாலம் ஆய்வு

முன்னதாக திருச்சி ஜங்ஷன் மேம்பாலம் கட்டுமான பணி சென்னை சாலையை இணைக்கும் வகையில் நடைபெறாமல் முடங்கி கிடப்பதை திருநாவுக்கரசர் பார்வையிட்டார். தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் வேல்முருகன் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி விட்டு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பாலம் கட்டுமான பணி பல ஆண்டுகளாக நிலுவையில் கிடப்பதற்கு பாதுகாப்பு துறையின் ஒரு ஏக்கருக்கு உட்பட்ட நிலம் வழங்கப்படாதது தான் காரணம் என தெரிவித்தார்கள். இது தொடர்பாக நான் ஏற்கனவே மத்திய மந்திரிகள் ராஜ்நாத்சிங், பியூஸ் கோயல் ஆகியோருடன் பேசி இருக்கிறேன்.

முதல் -அமைச்சரை சந்திப்பேன்

ராணுவ நிலத்தை விற்க முடியாது என்பதால் மாநில அரசு இதற்கு தகுந்த இடத்தை ஒதுக்கியது. அந்த இடத்தை பாதுகாப்பு துறை நிராகரித்து விட்டது. தற்போது காஞ்சீபுரம் மாவட்டம் அனுமந்தபுரம் என்ற இடத்தில் நிலம் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தெரியவந்து உள்ளது. இந்த நிலம் ஒதுக்கீடு தொடர்பான கோப்புகளை பாதுகாப்பு துறைக்கு விரைவாக அனுப்பி வைப்பதற்காக தமிழக வருவாய்த்துறை அமைச்சரை சந்தித்து பேச உள்ளேன். தேவைப்பட்டால் முதல் -அமைச்சரையும் சந்தித்து பேசுவேன். தமிழக அரசு அனுப்பிவிட்டால் மத்திய மந்திரிகளை சந்தித்து பேசி முடங்கி கிடக்கும் இந்த பாலம் கட்டுமான பணியை விரைவாக தொடங்க நடவடிக்கை எடுப்பேன்.

எம்.பி.யை காணவில்லையா?

புதுக்கோட்டை மாவட்டம் களமாவூர் ரெயில்வே மேம்பால பணியானது 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு இருந்தது. அந்த பாலம் கட்டுமான பணிக்கு புதிய டெண்டர் விடப்பட்டு உள்ளது. இன்னும் ஏழெட்டு மாதங்களில் அந்த பணியும் நிறைவடையும். நான் தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவன். 42 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் எம்.எல்.ஏ., எம்.பி, மாநில அமைச்சர், மத்திய மந்திரி என எத்தனையோ பதவிகளில் இருந்து உள்ளேன். நான் எங்கும் போய்விடவில்லை. எம்.பி.யை காணவில்லை என்று சுயவிளம்பரத்திற்காக யாரோ சிலர் தூண்டுதல் பேரில் நான்கைந்து பேர் போலீஸ் நிலையத்துக்கு மனு கொடுக்க சென்றிருக்கிறார்கள். அந்த மனுவையும் போலீசார் வாங்கவில்லை. அந்த நபர்கள் மீது வழக்கு தொடருவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது தன்மீது புகார் மனு கொடுத்தவர்களை பற்றி திருநாவுக்கரசர் கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்தார். இது தொடர்பாக கேள்வி எழுப்பிய நிருபர்களிடமும் கோபத்தை வெளிப்படுத்தினார்.


Next Story