பிற்படுத்தப்பட்ட, சீர்மரபின மாணவ, மாணவிகள், கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் அறிவிப்பு


பிற்படுத்தப்பட்ட, சீர்மரபின மாணவ, மாணவிகள், கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் அறிவிப்பு
x
தினத்தந்தி 20 Aug 2019 10:30 PM GMT (Updated: 20 Aug 2019 4:47 PM GMT)

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தேனி,

தமிழக அரசு உத்தரவின்படி, அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபின மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு எவ்வித நிபந்தனையும் இன்றி உதவித்தொகை வழங்கப்படுகிறது. முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பிக்க, விண்ணப்ப படிவங்களை அவர்கள் படிக்கிற கல்வி நிறுவனங்களிலேயே பெற்று பூர்த்தி செய்து, உரிய சான்றுகளை இணைத்து அக்டோபர் மாதம் 15-ந்தேதிக்குள் கல்வி நிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் மாணவ, மாணவிகள் தங்களின் வங்கிக் கணக்கு எண் மற்றும் விவரங்களை தவறாமல் குறிப்பிட வேண்டும்.

ஏற்கனவே உதவித்தொகை பெற்று வருபவர்கள், அதை இணையதளம் மூலம் புதுப்பித்தலுக்காக விண்ணப்பிக்க வேண்டும். புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்களை, அக்டோபர் 25-ந்தேதிக்குள்ளும், புதிதாக கல்வி உதவித்தொகை பெறுபவர்களுக்கான விண்ணப்பங்களை நவம்பர் 30-ந்தேதிக்குள்ளும் அந்தந்த கல்வி நிறுவனங்கள் சார்பில், இணையதளம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.

இத்திட்டம் குறித்த மேலும் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். அல்லது, www.tn.gov.in/bc-m-b-c-d-ept என்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story