பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதையடுத்து சம்பா சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரம்


பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதையடுத்து சம்பா சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரம்
x
தினத்தந்தி 20 Aug 2019 10:45 PM GMT (Updated: 20 Aug 2019 6:56 PM GMT)

பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதையடுத்து சம்பா சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தஞ்சாவூர்,

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இது தவிர கோடை நெல் சாகுபடியும் நடைபெறும். குறுவை பாசனத்துக்காக ஆண்டு தோறும் மேட்டூர் அணை ஜூன் மாதம் 12-ந்தேதி திறக்கப்படும்.

ஆனால் கடந்த 8 ஆண்டுகளாக ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்படவில்லை. தாமதமாக திறக்கப்பட்டது. இதனால் குறுவை சாகுபடி பொய்த்து விட்டது. ஆழ்துளை கிணறு மூலம் மட்டும் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. டெல்டா மாவட்டங்களில் 1 லட்சத்து ஆயிரம் எக்டேரில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. மேலும் வடகிழக்குப்பருவமழையும் பொய்த்து விட்டதால் கடந்த 2 ஆண்டுகளாக சம்பா, தாளடி சாகுபடியும் எதிர்பார்த்த அளவு நடைபெறவில்லை.

தண்ணீர் திறப்பு

இந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் அணை திறக்கப்படவில்லை. இந்த நிலையில் கர்நாடகாவில் பெய்த பலத்த மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. இந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு கடந்த 13-ந்தேதி அணை திறக்கப்பட்டது.

இந்த தண்ணீர் கல்லணையை 16-ந்தேதி இரவு வந்தடைந்தது. இதையடுத்து டெல்டா பாசனத்துக்கு கல்லணையில் இருந்து 17-ந்தேதி காலை தண்ணீர் திறக்கப்பட்டது. கல்லணையில் இருந்து வெண்ணாறு, கல்லணைக்கால்வாய், காவிரி மற்றும் கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

விவசாயிகள் தீவிரம்

தற்போது விவசாயிகள் சம்பா சாகுபடி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். தஞ்சை மாவட்டத்தில் தற்போது 1 லட்சத்து 5 ஆயிரம் எக்டேரில் சம்பா சாகுபடி மேற்கொள்ள இலக்கு திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் தாளடி சாகுபடி 30 ஆயிரம் எக்டேர் வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து தற்போது விவசாயிகள் நாற்றங்கால் தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்காக உழவு பணி போன்றவற்றில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். தஞ்சையை அடுத்த களிமேடு, ஒரத்தநாடு, சூரக்கோட்டை, காட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாய பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும் சம்பா சாகுபடிக்கு தேவையான விதைநெல், உரங்களும் இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன என வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story