தனியார் மயமாக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு: திருச்சியில் படைக்கலன் தொழிற்சாலை ஊழியர்கள் வேலை நிறுத்தம் தொடங்கினர்


தனியார் மயமாக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு: திருச்சியில் படைக்கலன் தொழிற்சாலை ஊழியர்கள் வேலை நிறுத்தம் தொடங்கினர்
x
தினத்தந்தி 20 Aug 2019 11:15 PM GMT (Updated: 20 Aug 2019 7:09 PM GMT)

தனியார் மயமாக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சியில் படைக்கலன் தொழிற்சாலை ஊழியர்கள் வேலை நிறுத்தம் தொடங்கினர்.

பொன்மலைப்பட்டி,

இந்தியா முழுவதும் 41 படைக்கலன் தொழிற்சாலைகள் உள்ளன. தமிழ்நாட்டில் 6 தொழிற்சாலைகள் உள்ளன. அவற்றில் 2 தொழிற்சாலைகள் திருச்சியில் உள்ளன. இந்த தொழிற்சாலைகளில் துப்பாக்கிகள் மற்றும் ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த தொழிற்சாலைகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு நிரந்தர மற்றும் ஒப்பந்த அடிப்படையில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த படைக்கலன் தொழிற்சாலைகளை தனியாருக்கு மாற்ற மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சாலைகளின் ஊழியர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினார்கள். ஆனால், மத்திய அரசு இதனை கண்டு கொள்ளவில்லை.

தொடர் வேலை நிறுத்தம்

இந்நிலையில் 41 படைக்கலன் தொழிற்சாலைகளை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஒரு மாதம் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்து அறிவித்திருந்தனர். அதன்படி, திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் அதிகாரிகளும், ஊழியர்களும் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒருசில உயர் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மட்டும் வேலைக்கு சென்றார்கள். ஒப்பந்த தொழிலாளர்களாக வேலை பார்த்து வரும் 150 பேரில் 10 பேர் மட்டும் துப்புரவு பணிக்கு சென்றார்கள். இதேபோல, எச்.ஏ.பி.பி. தொழிற்சாலையில் வேலை பார்க்கும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பங்குபெற்றனர். ஒப்பந்த தொழிலாளர்கள் 150 பேரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். சிலர் தரையில் அமர்ந்தும், படுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர் களுடன் துப்பாக்கி தொழிற்சாலை மற்றும் எச்.ஏ.பி.பி. கூட்டுக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் சரவணன் மற்றும் பிரபாகரன் ஆகியோரும் பங்கு பெற்றனர்.

போலீசார் குவிப்பு

துப்பாக்கி தொழிற்சாலை மற்றும் எச்.ஏ.பி.பி. தொழிற்சாலைகளில் பணிபுரியம் அதிகாரிகளை வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்கு செல்ல வேண்டும் என மத்திய அரசு நிர்ப்பந்திப்பதாக கூறப்படுகிறது. அதன்பேரில், ஒருசில அதிகாரிகள் வேலைக்கு சென்றனர். அவர்களை தொழிற்சங்க நிர்வாகிகளும், ஊழியர்களும் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

படைக்கலன் தொழிற் சாலைகளின் ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக துப்பாக்கி தொழிற்சாலை மற்றும் எச்.ஏ.பி.பி. வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், துப்பாக்கி தொழிற்சாலை வளாகத்தில் தற்காலிக புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

Next Story