இறுதி ஊர்வலத்தில் பட்டாசு வெடித்ததில் தகராறு இருதரப்பினரிடையே மோதல்; 9 பேர் படுகாயம்


இறுதி ஊர்வலத்தில் பட்டாசு வெடித்ததில் தகராறு இருதரப்பினரிடையே மோதல்; 9 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 20 Aug 2019 10:45 PM GMT (Updated: 20 Aug 2019 8:10 PM GMT)

இலுப்பூர் அருகே இறுதி ஊர்வலத்தில் பட்டாசு வெடித்த தகராறில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 9 பேர் படுகாயமடைந்தனர். 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அன்னவாசல்,

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே உள்ள தொட்டியபட்டியை சேர்ந்தவர் சின்னையா. இவரது மகன் பிரேம்குமார் (வயது 26). இவரது பாட்டி ரெங்கம்மாள் நேற்று முன்தினம் இறந்துவிட்டார். இதையடுத்து இவரது உடலை பிரேம்குமார் தரப்பினர் அடக்கம் செய்வதற்காக சுடுகாட்டிற்கு எடுத்து சென்றுள்ளனர். அப்போது இறந்தவர் உடலை கொண்டு செல்லும் வழியில் பட்டாசு வைத்து கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பகுதிகளை சேர்ந்த அடுத்தடுத்த வீடுகளில் உள்ள விவசாயிகளான ராசு (55) மற்றும் பெருமாள் மகன் செந்தில்குமார் (32) ஆகிய 2 பேரும் சேர்ந்து பிரேம்குமார் தரப்பை சேர்ந்தவர்களிடம் இந்த பகுதிகளில் பட்டாசு வெடிக்க வேண்டாம். குழந்தைகள் அதிகம் உள்ளனர் என்றும், மாடுகள் மிரளும் என்று கூறினர். மேலும் வைக்கோல் போர்கள் மீது பட்டாசு பட்டால் தீ பிடித்துவிடும் என கூறியுள்ளனர்.

12 பேர் மீது வழக்கு

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அந்த பிரச்சினை பெரியதாகி கம்பு, கட்டை, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் ஒருவரை ஒருவர் பலமாக தாக்கி கொண்டனர். இதில் ஒரு தரப்பை சேர்ந்த சின்னையா மகன் பிரேம்குமார், முத்தன் (53), ரெங்கசாமி மனைவி ராஜேஸ்வரி (23) ஆகிய 3 பேரும், மற்றொரு தரப்பை சேர்ந்த ராசு, பெருமாள் மகன் செந்தில்குமார் (32), முருகன் மனைவி ராசம்மாள் (55), சண்முகம் மனைவி உஷாராணி (30), முத்து மனைவி சின்னம்மாள், ராசு மனைவி சிலம்பாயி ஆகிய 6 பேர் என 9 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் படுகாயமடைந்த 9 பேர் இலுப்பூர் மற்றும் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மோதலில் சரக்கு வேன் கண்ணாடி உடைக்கப்பட்டது. இது தொடர்பாக இரு தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் இலுப்பூர் போலீசார் 3 பெண்கள் உள்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story