தேனி அருகே, மதுபானம் கடத்திய 2 பேர் கைது - 375 மதுபாட்டில்கள் பறிமுதல்


தேனி அருகே, மதுபானம் கடத்திய 2 பேர் கைது - 375 மதுபாட்டில்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 21 Aug 2019 11:00 PM GMT (Updated: 21 Aug 2019 5:53 PM GMT)

தேனி அருகே, மதுபானம் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து 375 மதுபாட்டில்கள் மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

தேனி,

தேனியை அடுத்துள்ள பழனிசெட்டிபட்டியில் இருந்து அரண்மனைப்புதூர் பகுதிக்கு ஒரு ஆட்டோவில் சில்லறையில் விற்பனை செய்வதற்காக மதுபானம் கடத்திச் செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில், போலீசார் ரோந்து சென்றனர். போலீசாருக்கு தகவல் கொடுத்தவர் தெரிவித்த பதிவு எண் கொண்ட ஆட்டோ அரண்மனைப்புதூர் விலக்கை கடந்து சென்று கொண்டு இருந்தது. அதை அறிந்த தனிப்பிரிவு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ், ஏட்டு சந்திரசேகரன் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் அந்த ஆட்டோவை துரத்திச் சென்றனர். 

அரண்மனைப்புதூரில் ஒரு வேகத்தடையை கடக்க முயன்ற போது அந்த ஆட்டோவை போலீசார் மடக்கிப் பிடித்தனர். ஆட்டோவில் டிரைவர் உள்பட 2 பேர் இருந்தனர். ஆட்டோவில் 375 மதுபான பாட்டில்கள் இருந்தன. ஆட்டோ மற்றும் மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து அவர்கள் இருவரையும் பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர்கள் பழனிசெட்டிபட்டி தெற்கு ஜகநாதபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் செல்வம் (வயது 29), ராஜாஜி தெருவை சேர்ந்த சுதாகர் (29) என்பது தெரியவந்தது. 

மேலும், அவர்கள், பூதிப்புரம் சாலையில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் இருந்து மதுபான பாட்டில்களை மொத்தமாக வாங்கி சில்லறையில் விற்பனை செய்வதற்காக கொண்டு சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் யாழிசை செல்வன் வழக்குப்பதிவு செய்து செல்வம், சுதாகர் ஆகிய 2 பேரையும் கைது செய்தார். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story