வெடிமருந்து தொழிற்சாலையில் வேலை நிறுத்த போராட்டம்: பணிக்கு செல்ல முயன்ற அலுவலர்களை தொழிலாளர்கள் தடுத்ததால் பரபரப்பு


வெடிமருந்து தொழிற்சாலையில் வேலை நிறுத்த போராட்டம்: பணிக்கு செல்ல முயன்ற அலுவலர்களை தொழிலாளர்கள் தடுத்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 21 Aug 2019 11:00 PM GMT (Updated: 21 Aug 2019 7:17 PM GMT)

அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலையில் பணிக்கு செல்ல முயன்ற அலுவலர்களை தொழிலாளர்கள் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

குன்னூர்,

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் நாடு முழுவதும் 41 ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அதில் குன்னூர் அருகே அருவங்காட்டில் இயங்கி வரும் வெடிமருந்து தொழிற்சாலையும் அடங்கும். இதற்கிடையில் மேற்கண்ட ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலைகளை பொதுத்துறை நிறுவனங்களாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. இதற்கு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும் இது தொடர்பாக நடத்தப்பட்ட பல கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன.இதைத்தொடர்ந்து ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலைகளை பொதுத்துறை நிறுவனங்களாக மாற்றும் முடி வை கைவிடக்கோரி தொழிற்சங்கங்கள் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. அதன்படி அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையிலும் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்தது. எனினும் 60(பி) கிரேடு அலுவலர்கள் வழக்கம்போல் தொழிற்சாலைக்கு பணிக்கு செல்ல முயன்றனர். அப்போது அவர் களை பணிக்கு செல்ல விடாமல், காந்தி கேட் பகுதியில் கூடியிருந்த தொழிலாளர்கள் தடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கோஷங் களை எழுப்பி தர்ணாவில் ஈடுபட்டனர். உட னே அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் வேறு வழியின்றி 60(பி) கிரேடு அலுவலர்கள் பணிக்கு செல்லாமல் குடியிருப்புகளுக்கு திரும்பினர். 

Next Story