தஞ்சை மாவட்டத்தில் தூர்வாரும் பணிகள் 26-ந் தேதிக்குள் முடிக்கப்படும் கலெக்டர் அண்ணாதுரை தகவல்


தஞ்சை மாவட்டத்தில் தூர்வாரும் பணிகள் 26-ந் தேதிக்குள் முடிக்கப்படும் கலெக்டர் அண்ணாதுரை தகவல்
x
தினத்தந்தி 22 Aug 2019 11:00 PM GMT (Updated: 22 Aug 2019 7:08 PM GMT)

தஞ்சை மாவட்டத்தில் தூர்வாரும் பணிகள் வருகிற 26-ந் தேதிக்குள் முடிக்கப்படும் என்று கலெக்டர் அண்ணாதுரை கூறினார்.

தஞ்சாவூர்,

தஞ்சை அருகே வெண்ணலோடை கிராமத்தில் வெண்ணாற்றின் நடுவே தண்ணீர் செல்வதற்கு தடையாக இருந்த மணல் திட்டுகள் அகற்றி தூர்வாரும் பணி நடைபெற்றதை, கலெக்டர் அண்ணாதுரை பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

சம்பா சாகுபடிக்காக காவிரி உள்ளிட்ட ஆறுகளில் தண்ணீர் விரைந்து கடைமடை பகுதி வரை செல்வதற்கு ஏதுவாக தூர்வாரும் பணி நடைபெறுகிறது. தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 114 பணிகள், 789 கி.மீட்டர் நீளத்துக்கு ரூ.24 கோடியில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் மாவட்டம் முழுவதும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. வெண்ணலோடை கிராமத்தில் ரூ.30 லட்சம் செலவில் வெண்ணாற்றின் நடுவே இருந்த மணல் திட்டுகள் அகற்றப்பட்டு, தண்ணீர் சீராக செல்ல கரை பலப்படுத்தப்பட்டு வருகிறது.

26-ந் தேதிக்குள் முடிக்கப்படும்

இந்த பணிகள் முடிவடைந்ததும், வெண்ணாற்றில் தண்ணீர் திறக்கப்படும். தஞ்சை மாவட்டத்தில் நடைபெறும் சிறப்பு தூர்வாரும் பணிக்காக இதர மாவட்டங்களிலிருந்து 95 ராட்சத எந்திரங்கள் வரவழைக்கப்பட்டும், பிற மாவட்ட பொதுப்பணித்துறை பொறியாளர்கள் வரவழைக்கப்பட்டு அவர்கள் மேற்பார்வையில் பணிகள் துரிதப்படுத்தப்படுகிறது. இந்த பணிகள் அனைத்தும் வருகிற 26-ந் தேதிக்குள் முடிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது தூர்வாரும் பணி சிறப்பு கண்காணிப்பு அலுவலர் ராஜகோபால் சுங்காரா, பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் அன்பரசன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Next Story