சிங்கப்பெருமாள் கோவில் அருகே வாலிபர் வெட்டிக்கொலை


சிங்கப்பெருமாள் கோவில் அருகே வாலிபர் வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 22 Aug 2019 10:30 PM GMT (Updated: 22 Aug 2019 7:17 PM GMT)

சிங்கப்பெருமாள் கோவில் அருகே வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் சூர்யா (வயது 22). இவர் மீது மறைமலைநகர் போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை முயற்சி வழக்கு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு சிங்கப்பெருமாள்கோவில் அனுமந்தபுரம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சூர்யா சென்று கொண்டிருந்தார்.

அப்போது அதே சாலையில் எதிரே 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் சூர்யாவை திடீரென வழிமறித்து அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக வெட்டினர். அவர்களிடமிருந்து தப்பித்து ஓட முயன்ற சூர்யாவை 4 பேர் கொண்ட கும்பல் துரத்தி சென்று சரமாரியாக வெட்டியது. இதில் உடல் முழுவதும் பல்வேறு இடங்களில் வெட்டு காயம் அடைந்த சூர்யா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த கொலை சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் நாலாபுறமும் அலறியடித்துக்கொண்டு ஓடினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த வண்டலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வளவன் மற்றும் மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சூர்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த கொலை முன்விரோதம் காரணமாக நடைபெற்றதா? அல்லது வேறு ஏதாவது காரணத்திற்காக நடந்ததா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். மேலும் வண்டலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகள் 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story