முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்


முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
x
தினத்தந்தி 22 Aug 2019 10:45 PM GMT (Updated: 22 Aug 2019 8:32 PM GMT)

திருச்சி மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாமை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.

மலைக்கோட்டை,

தமிழக வருவாய் துறை சார்பில் மக்களின் குறைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டி, தமிழக முதல்-அமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் தமிழகம் முழுவதும் நடத்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டார். அதன்படி, திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சி 8-வது வார்டில் உள்ள தேவதானம் பகுதியில் நேற்று காலை முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.

மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு தலைமை தாங்கினார். திருச்சி ஆவின் தலைவர் கார்த்திகேயன், மாநகராட்சி தலைமை பொறியாளர் அமுதவல்லி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டு குறைதீர்க்கும் முகாமை தொடங்கி வைத்தனர்.

அப்போது அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேசுகையில், ‘ஒரு காலத்தில் அதிகாரிகளை தேடி பொதுமக்கள் சென்று மனு கொடுத்து கால்கடுக்க நின்ற காலம் இருந்தது. ஆனால், இன்று அதிகாரிகள் பொதுமக்களை தேடிவந்து குறைகளை கேட்டு தீர்த்து வைக்கும் காலமாக உள்ளது. ஜெயலலிதா வழியில் மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் இன்று அ.தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது.’ என்றார்.

சோமரசம்பேட்டை

இதுபோல் சோமரசம்பேட்டையை அடுத்துள்ள அல்லித்துறை சரவணபுரத்தில் நடந்த முகாமையும் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் தொடங்கி வைத்தது. பயனளிகளுக்கு சான்றிதழ் வழங்கினர் மேலும் முசிறி பேரூராட்சி அலுவலகத்தில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. முசிறி ஆர்.டி.ஓ. ரவிச்சந்திரன் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்து பேசினார். தாசில்தார் ஆறுமுகம் முன்னிலை வகித்தார்.

பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் வரவேற்றார். வருகிற 31-ந் தேதி வரை பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள முகாம் அலுவலரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. புள்ளம்பாடி ஒன்றியம், வெங்கடாசலபுரம் கிராமத்தில் நடைபெற்ற முகாமிற்கு வருவாய்ஆய்வாளர் அப்துல்கரீம், கிராம நிர்வாக அலுவலர் ராஜாஅறிவழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புள்ளம்பாடி மண்டலதுணை தாசில்தார் லோபோ கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.

மேலும் துறையூர் தாலுகாவில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் வருகிற 31-ந்தேதி வரை நடைபெறுகிறது. அந்தந்த கிராம நிர்வாக அலுவலகத்தில் நடைபெறும் முகாமில் பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்கள் மூலம் கொடுத்து தீர்வு பெறலாம் என்று துறையூர் தாசில்தார் சத்தியநாராயணன் தெரிவித்தார்.


Next Story