கன்னியாகுமரியில் துறைமுகம் அமைப்பது குறித்து மத்திய மந்திரி ஆலோசனை


கன்னியாகுமரியில் துறைமுகம் அமைப்பது குறித்து மத்திய மந்திரி ஆலோசனை
x
தினத்தந்தி 22 Aug 2019 11:00 PM GMT (Updated: 22 Aug 2019 8:49 PM GMT)

கன்னியாகுமரியில் துறைமுகம் அமைப்பது குறித்து மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

கன்னியாகுமரி,

மத்திய கப்பல் போக்குவரத்து மற்றும் ரசாயனம், உரத்துறை இணை மந்திரி மன்சுக் மாண்டவியா நேற்றுமுன்தினம் நள்ளிரவில் திருவனந்தபுரத்தில் இருந்து கார் மூலம் கன்னியாகுமரிக்கு வந்தார். அங்கு அரசு விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுத்தார்.

நேற்று காலையில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே, போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் மன்சுக் மாண்டவியாவை சந்தித்து பேசினர். அதன்பின் அவர் கன்னியாகுமரி பகுதியில் உள்ள துறைமுக நிறுவன அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார். அங்கு கன்னியாகுமரியில் துறைமுகம் அமைப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில், தூத்துக்குடி துறைமுக பொறுப்புக்கழக தலைவர் ராமச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பாலம் கட்டப்படும்

இதனையடுத்து மன்சுக் மாண்டவியா படகு போக்குவரத்து நடைபெறும் இடத்துக்கு சென்றார். அங்கு கடற்கரையில் இருந்து விவேகானந்தர் பாறைக்கு ரோப் கார் அமைக்கும் இடத்தை ஆய்வு செய்தார்.

அப்போது, திருவள்ளுவர் சிலை பாறையில் இருந்து விவேகானந்தர் மண்டபத்துக்கு பாலம் கட்டப்படும் எனவும், ரோப்கார் திட்டமும் உறுதியாக கொண்டு வரப்படும் எனவும் அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பா.ஜனதா மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன், துணை தலைவர் முத்துராமன், முன்னாள் நகரசபை தலைவி மீனாதேவ், சுசீந்திரம் பா.ஜ.க. தலைவர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சாமி தரிசனம்

பின்னர் மன்சுக் மாண்டவியா கன்னியாகுமரி பகவதி அம்மன், மண்டைக்காடு பகவதி அம்மன், சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். மேலும் முட்டத்தில் உள்ள கலங்கரை விளக்கத்தையும் பார்வையிட்டார்.

முன்னதாக விவேகானந்த கேந்திராவுக்கு சென்ற அவரை கேந்திர துணை தலைவர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். அங்கு விவேகானந்த கேந்திராவின் நிறுவனர் ஏக்நாத் ராண்டேவின் சமாதியில் மலர் தூவி மரியாதை செய்தார். பாரத மாதா கோவில், ராமாயண தரிசன சித்திர கண்காட்சிகூடத்தையும் பார்வையிட்டார்.

Next Story