குறிப்பிட்ட காலத்திற்குள் வருமான வரி கட்டாமல் இருந்தால் சிக்கல்களை சந்திக்க நேரிடும் - உதவி கமிஷனர் பேச்சு


குறிப்பிட்ட காலத்திற்குள் வருமான வரி கட்டாமல் இருந்தால் சிக்கல்களை சந்திக்க நேரிடும் - உதவி கமிஷனர் பேச்சு
x
தினத்தந்தி 23 Aug 2019 10:30 PM GMT (Updated: 23 Aug 2019 5:20 PM GMT)

குறிப்பிட்ட காலத்திற்குள் வருமான வரி கட்டாமல் இருந்தால் பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்று வருமான வரித்துறை உதவி கமிஷனர் கூறினார்.

மதுரை,

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் 10-வது செயற்குழு கூட்டம், மதுரை காமராஜர் சாலையில் உள்ள சங்க கட்டிடத்தில் நடந்தது. சங்க தலைவர் ஜெகதீசன் தலைமை தாங்கினார். முதுநிலை தலைவர் ரத்தினவேலு முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மதுரை வருமானவரித்துறை உதவி கமிஷனர் கலைச்செல்வி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

பல வருடங்களுக்கு முன்பு வருமான வரி கட்டுபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. ஆனால், தற்போது பெரும்பாலானோர் வருமான வரி கட்டுபவர்களாக இருக்கிறார்கள். இதன் காரணமாக வருமான வரித்துறை அதிகாரிகளும், வணிகர்களும் நண்பர்களாக மாறிவிட்டார்கள். பல மணி நேரம் காத்திருந்து வருமான வரி கட்டிய காலங்களும் இருக்கிறது. ஆனால், தற்போது மின்னணு முறையில் அனைத்தும் எளிமையாக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

வருமான வரி கட்டுபவர்களையும், யார் கட்டவில்லை என்பதையும் வரிமான வரித்துறை முழுமையாக கண்காணித்து கொண்டு தான் இருக்கிறது. எனவே குறிப்பிட்ட காலத்திற்குள் அனைத்து வணிகர்களும் வருமான வரி கட்டிவிட வேண்டும். இல்லாவிட்டால் பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேரிடும். தகவல் தொழில்நுட்பங்களும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதன்மூலம் வணிகர்கள், அதிகாரிகள் என எல்லோருடைய சிரமத்தையும் தொழில்நுட்பம் குறைக்கிறது. வணிகர்கள் தவறு செய்தால் தகவல் தொழில்நுட்பங்கள் அதனை காண்பித்து கொடுத்து விடும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். யாரும் வருமான வரி கட்டாமல் தப்பிக்க முடியாது. வணிகர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தீர்க்கும் வகையில் ஆன்லைனில் புகார் அளிக்கும் வசதியும் இருக்கிறது. இதனை வணிகர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதன்பிறகு வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் வணிகர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், வணிகர்களுக்கு ஏற்பட்ட பல்வேறு சந்தேகங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் விளக்கப்படம் மூலம் தெளிவுபடுத்தினர். மேலும், வரி தொகை செலுத்துவது தொடர்பாகவும் விளக்கம் அளித்தனர். இந்த நிகழ்ச்சியில், வருமான வரித்துறை அதிகாரிகள் ஸ்ரீதர், ஞானகுருலட்சுமி, தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க செயலாளர் செல்வம் உள்பட சங்க நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில், இணை செயலாளர் கணேசன் நன்றி கூறினார்.

Next Story