திருவாரூர் மாவட்டத்தில் ரூ.16 கோடியில் குடிமராமத்து-தூர்வாரும் பணிகள் அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார்


திருவாரூர் மாவட்டத்தில் ரூ.16 கோடியில் குடிமராமத்து-தூர்வாரும் பணிகள் அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 24 Aug 2019 11:00 PM GMT (Updated: 24 Aug 2019 5:13 PM GMT)

திருவாரூர் மாவட்டத்தில் ரூ.16 கோடியில் குடிமராமத்து மற்றும் தூர்வாரும் பணிகளை அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார்.

மன்னார்குடி,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகரில் பாமணி ஆற்றில் உள்ள ரெகுலேட்டர் மற்றும் மன்னார்குடியை அடுத்த மகாதேவபட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் குடிமராமத்து பணிகள் மற்றும் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின்கீழ் தூர்வாரும் பணிகளை அமைச்சர் ஆர்.காமராஜ் தொடங்கி வைத்தார். தொடர்ந்து பாமணி ஆற்றின் அருகில் தமிழக அரசின் நிர்வாக ஆணையர் சத்யகோபால் உடன் இணைந்து நீர்வரத்து பகுதிகளை பார்வையிட்டார்.

அப்போது திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தெய்வநாயகி, மன்னார்குடி உதவி கலெக்டர் புண்ணியகோட்டி, முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பொன்.வாசுகிராம், முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் தமிழ்ச்செல்வம் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

ரூ.16 கோடி நிதி ஒதுக்கீடு

பின்னர் அமைச்சர் காமராஜ், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் குடிமராமத்து மற்றும் சிறப்பு தூர்வாரும் திட்டம் ஆகியவற்றுக்கு தலா ரூ.16 கோடி வீதம் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் உள்ள நீராதார கட்டமைப்புகளை மேம்படுத்தி மழைநீர் சேகரிக்கும் அமைப்பாக மாற்றுவதற்கும், அனைத்து வகைகளிலும் மழைநீரை சேமிக்கும் திட்டத்தையும் உறுதியாக செயல்படுத்தி வருகிறார்.

இதுபோன்ற பணிகளை பார்வையிட கண்காணிக்க அதிகாரிகளுக்கும் உரிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். எதிர்காலத்தில் பழனிசாமியின் ஆட்சிக்காலம் சிறப்பான காலம் என சொல்லும் அளவுக்கு பணிகள் நடந்துவருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

துரித கதியில் பணிகள்

தமிழக அரசின் நிர்வாக ஆணையர் சத்யகோபால் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக முதல்வரின் சிறப்பு திட்டத்தின் கீழ் 287 பணிகளுக்கு ரூ.61 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 76 பணிகள் தற்போதைய பாசன பருவகாலம் முடிக்கப்பட்ட உடன் நடத்தலாம் என தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தூர்வாரும் பணிகளை கண்காணிக்க 8 கணிப்பு அலுவலர்களை முதல்-அமைச்சர் நியமித்துள்ளார்.

சிறப்பு தூர்வாரும் பணிகளை வருகிற 31-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதால் பொக்லின் எந்திரங்களை தேவையான இடங்களுக்கு வெளி மாவட்டத்தில் இருந்து வரவழைத்து காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை நடைபெறும் அளவுக்கு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதேபோல் குடிமராமத்து பணிகளை வருகிற செப்டம்பர் 15-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அந்த அடிப்படையில் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது.

மாநில அளவில் முதலிடம்

திருவாரூர் மாவட்டத்தில் ஏற்கனவே நடைபெற்ற நீர்மூழ்கி தடுப்பணை போன்ற நீராதாரத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ச்சியாக நடைபெறும். திருவாரூர் மாவட்டம் விவசாயிகளுக்கு வண்டல் மண் வழங்கும் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதில், மாநிலத்தில் முதலிடம் பெற்று பரிசினைப் பெற்றதைப்போல நடப்பாண்டிலும் சிறப்பான பணிகளை மேற்கொள்ள தற்போதைய மாவட்ட கலெக்டருக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story