சங்கராபுரம் அருகே, மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த டிரைவர் சாவு


சங்கராபுரம் அருகே, மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த டிரைவர் சாவு
x
தினத்தந்தி 25 Aug 2019 10:15 PM GMT (Updated: 25 Aug 2019 5:28 PM GMT)

சங்கராபுரம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த டிரைவர் பரிதாபமாக இறந்தார்.

சங்கராபுரம்,

சங்கராபுரத்தில் உள்ள கள்ளக்குறிச்சி மெயின் ரோட்டை சேர்ந்தவர் முகமது ஜான் மகன் அப்துல் அலி (வயது 42). இவர் வெளிநாட்டில் தங்கி டிரைவர் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் விடுமுறையில் அப்துல்அலி கடந்த வாரம் தனது வீட்டுக்கு வந்தார். திருச்சியில் உள்ள தனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் அப்துல் அலி மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார். சங்கராபுரம் அருகே மயிலாம்பாறை பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, நாய் ஒன்று குறுக்கே வந்துள்ளது. நாய் மீது மோதாமல் இருப்பதற்காக மோட்டார் சைக்கிளில் பிரேக் பிடித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து அப்துல்அலி தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அப்துல்அலி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைபார்த்த அவரது உறவினர்கள் கதறி அழுதனர். இது குறித்த தகவலின் பேரில் சங்கராபுரம் போலீசார், இறந்த அப்துல் அலியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விபத்து குறித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Next Story