விருத்தாசலம் அருகே, பட்டதாரி பெண், தீக்குளித்து தற்கொலை - காரணம் என்ன? போலீசார் விசாரணை


விருத்தாசலம் அருகே, பட்டதாரி பெண், தீக்குளித்து தற்கொலை - காரணம் என்ன? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 25 Aug 2019 10:30 PM GMT (Updated: 25 Aug 2019 5:46 PM GMT)

விருத்தாசலம் அருகே பட்டதாரி பெண், தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருத்தாசலம்,

விருத்தாசலம் அருகே உள்ள பரவலூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(வயது 55). இவருடைய மகள் சுகுணா(வயது 21). பி.எஸ்சி. படித்துள்ளார். பரவலூர் கிராமத்தில் நேற்று நடந்த அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு ரவிச்சந்திரன் குடும்பத்தினர் சென்று விட்டனர். அப்போது சுகுணா, மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

இந்த நிலையில் சுகுணா திடீரென கதவை சாத்தி, உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுக்கொண்டார். பின்னர் அவர், வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து தனது உடலில் ஊற்றிக்கொண்டு தீ வைத்தார். இதில் உடல் முழுவதும் தீ பற்றி எரிந்தது. இதில் வலி தாங்க முடியாமல் அவர், அலறி துடித்தார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, கதவை திறக்க முயன்றும் முடியவில்லை.

இதனால் சிறிது நேரத்தில் உடல் கருகிய நிலையில் சுகுணா, சுருண்டு விழுந்து இறந்தார். இது பற்றி அறிந்ததும் சுகுணாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஓடிவந்து, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு சுகுணா உடல் கருகி கிடந்ததை கண்டு, அவர்கள் கதறி அழுதனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சுகுணாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுகுணா, தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story