திருவாரூரில் போலீஸ் பணிக்கு 2,404 பேர் தேர்வு எழுதினர்


திருவாரூரில் போலீஸ் பணிக்கு 2,404 பேர் தேர்வு எழுதினர்
x
தினத்தந்தி 25 Aug 2019 10:45 PM GMT (Updated: 25 Aug 2019 6:48 PM GMT)

திருவாரூரில் போலீஸ் பணிக்கு 2,404 பேர் தேர்வு எழுதினர்.

திருவாரூர்,

சீருடை பணியாளர் தேர்வு குழுமம் நடத்தும் இரண்டாம் நிலை போலீசாருக்கு, சிறைத்துறை மற்றும் தீயணைப்பு துறை காவலர்கள் தேர்விற்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது. இதில் திருவாரூர் மாவட்டத்தில் 587 பெண்கள், 2,461 ஆண்கள் உள்பட மொத்தம் 3,048 பேர் எழுத்து தேர்வினை எழுத விண்ணப்பித்து இருந்தனர். இந்த தேர்விற்காக திருவாரூர் மாவட்டத்தில் 3 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.

திருவாரூர் கிடாரங்கொண்டான் திரு.வி.க. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தேர்வு மையத்தில் 1,401 தேர்வர்களும், திருவாரூர் வேலுடையார் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் 1,061 தேர்வர்களும், திருவாரூர் வ.சோ.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் 586 தேர்வர்களும் தேர்வு எழுத இருந்தனர். ஆனால் 2,404 பேர் தேர்வு எழுதினர். இதில் 644 பேர் தேர்வு எழுத வரவில்லை.

சிறப்பு பஸ் வசதி

காவலர் எழுத்து தேர்வுகளை சிறப்பு தணிக்கை செய்ய தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் நியமிக்கப்பட்டு இருந்த சென்னை ரெயில்வே போலீஸ் ஐ.ஜி. வனிதா, அனைத்து மையங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை உடன் இருந்தார். தேர்வு மையங்களில் 288 போலீஸ் அலுவலர்களும், 33 அமைச்சு பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்வர்கள் தேர்வு மையங்களில் காலை 9 மணி முதல் 10 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். தேர்வர்கள் தேர்வு மையத்திற்குள் வரும்போது பேனாக்களுடன் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். செல்போன், கைபை, மணி பர்ஸ் உள்ளிட்ட பொருட்கள் எதற்கும் உள்ளே அனுமதி மறுக்கப்பட்டது. தேர்வு எழுத வரும் தேர்வர்களுக்கு தேவையான சிறப்பு பஸ் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

Next Story