பெரம்பலூர்-அரியலூரில் 2-ம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வை 4,384 பேர் எழுதினர் 1,134 பேர் வரவில்லை


பெரம்பலூர்-அரியலூரில் 2-ம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வை 4,384 பேர் எழுதினர் 1,134 பேர் வரவில்லை
x
தினத்தந்தி 25 Aug 2019 10:45 PM GMT (Updated: 25 Aug 2019 7:45 PM GMT)

பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வினை 4,384 பேர் எழுதினர். 1,134 பேர் தேர்வு எழுத வரவில்லை.

அரியலூர்,

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் மூலமாக இரண்டாம் நிலை காவலர்கள், சிறை காவலர்கள், தீயணைப்புத்துறை வீரர்கள் உள்ளிட்ட பணியிடங்களில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் இந்த தேர்வினை எழுத 1,550 ஆண்களும், 278 பெண்களும் என மொத்தம் 1,828 பேர் தகுதி பெற்றிருந்தனர். அவர்களுக்கான தேர்வு மையங்கள் பெரம்பலூர்-துறையூர் சாலையில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களில் 93 அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தது. தேர்வு எழுதுவதற்கு தேர்வர்கள் காலை 9.45 மணிக்கு மையங்களுக்கு சென்றனர். முன்னதாக அவர்களின் தேர்வுக்கூட அனுமதி சீட்டினை (ஹால் டிக்கெட்) மைய அலுவலர்கள் சரிபார்த்தும், அவர்களை சோதனையிட்ட பிறகே உள்ளே அனுமதித்தனர். இதையடுத்து சரியாக காலை 10 மணிக்கு வினாத்தாள் கொடுக்கப்பட்டதும், தேர்வர்கள் தேர்வு எழுத ஆரம்பித்தனர். காலை 11.20 மணிக்கு தேர்வு முடிவடைந்தது. 80 மதிப்பெண்கள் அடங்கிய வினாக்களுக்கு பதிலளிக்க தேர்வர்களுக்கு 80 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது.

ஆயுதப்படை போலீஸ் ஐ.ஜி. ஆய்வு

இந்த தேர்வினை 1,211 ஆண்களும், 201 பெண்களும் என மொத்தம் 1,412 பேர் எழுதினர். 416 பேர் தேர்வு எழுத வரவில்லை. மேலும் இந்த தேர்வினை ஆயுதப்படை போலீஸ் ஐ.ஜி. தமிழ்ச்சந்திரன் தலைமையிலான பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷாபார்த்திபன் மற்றும் போலீசார் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். முன்னதாக தேர்வு மையத்துக்குள் தேர்வர்களுக்கு செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல தடை செய்யப்பட்டிருந்தது. இதனால் தேர்வர்களின் செல்போன் உள்ளிட்டவைகள் போலீசார் சோதனையின் போது கைப்பற்றப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்பட்டு தேர்வு முடிந்ததும் கொடுக்கப்பட்டது.

அரியலூர் மாவட்டத்தில்...

இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் இரண்டாம் நிலை காவலர்கள், சிறை காவலர்கள், தீயணைப்புத்துறை வீரர்கள் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு உடையார்பாளையம் அருகே தத்தனூரில் உள்ள மீனாட்சி ராமசாமி கல்வி நிறுவனங்களில் நேற்று நடைபெற்றது. இந்த தேர்வினை எழுத ஆண்கள், பெண்கள் என மொத்தம் 3,690 பேர் தகுதி பெற்றிருந்தனர். ஆனால் 2,972 பேர் மட்டும் தேர்வு எழுத வந்திருந்தனர். 718 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வினை திருச்சி மத்திய மண்டல போலீஸ் டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் பார்வையிட்டனர்.

Next Story