குன்னூர் ஏல மையத்தில், தேயிலைத்தூள் விலை உயர்வு


குன்னூர் ஏல மையத்தில், தேயிலைத்தூள் விலை உயர்வு
x
தினத்தந்தி 25 Aug 2019 10:00 PM GMT (Updated: 25 Aug 2019 11:48 PM GMT)

குன்னூர் ஏல மையத்தில் தேயிலைத்தூள் விலை உயர்ந்து உள்ளது.

குன்னூர்,

நீலகிரி மாவட்ட பொருளாதாரத்தில் தேயிலைத்தூள் உற்பத்தி முக்கிய பங்கு வகிக்கிறது. தேயிலை விவசாயத்தை நம்பி 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் பிழைப்பு நடத்தி வருகின்றனர். மேலும் நீலகிரி மாவட்டம் முழுவதும் 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளும், 100-க்கும் மேற்பட்ட தனியார் தேயிலை தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் தேயிலைத்தூள், குன்னூரில் உள்ள ஏல மையம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு தேயிலை வர்த்தகர் அமைப்பு சார்பில் ஆன்லைனில் ஏலம் நடைபெறுகிறது.

இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்கள் கலந்துகொண்டு தேயிலைத்தூளை ஏலம் எடுக்கின்றனர். தேயிலை வர்த்தகர் அமைப்பில் உறுப்பினராக உள்ளவர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. வாரந்தோறும் வியாழன், வெள்ளி ஆகிய 2 நாட்கள் குன்னூரில் தேயிலை ஏலம் நடைபெறுகிறது. அதன்படி கடந்த 22, 23-ந் தேதிகளில் நடந்த ஏலத்துக்கு 10 லட்சத்து 95 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனைக்கு வந்தது.

இதில் 7 லட்சத்து 27 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் இலைரகமாகவும், 3 லட்சத்து 68 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் டஸ்ட்ரகமாகவும் இருந்தது. இந்த ஏலத்தில் 9 லட்சத்து 7 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனையானது. இது 84 சதவீத விற்பனை ஆகும்.

விற்பனையான தேயிலைத்தூளின் ரொக்க மதிப்பு ரூ.7 கோடியே 54 லட்சம் ஆகும். அதிகபட்ச விலையாக சி.டி.சி. தேயிலைத்தூள் கிலோவுக்கு ரூ.263, ஆர்தோடக்ஸ் தேயிலைத்தூள் கிலோவுக்கு ரூ.226 என இருந்தது. சராசரி விலையாக இலை ரக சாதாரண வகை கிலோவுக்கு ரூ.64 முதல் ரூ.74 வரையும், உயர் வகை கிலோவுக்கு ரூ.105 முதல் ரூ.127 வரையும் ஏலம் போனது. டஸ்ட் ரக சாதாரண வகை கிலோவுக்கு ரூ.65 முதல் ரூ.71 வரையும், உயர் வகை கிலோவுக்கு ரூ.101 முதல் 118 வரையும் விற்பனையானது. விற்பனையான அனைத்து தேயிலைத்தூள் ரகங்களுக்கும் கடந்த ஏலத்தை விட ரூ.2 விலை உயர்வு இருந்தது.

அடுத்த ஏலம் வருகிற 29, 30-ந் தேதிகளில் நடைபெறுகிறது. அந்த ஏலத்தில் 11 லட்சத்து 81 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனைக்கு வருகிறது.

Next Story