போலீஸ் எழுத்து தேர்வு, போலி ஹால்டிக்கெட் தயாரித்து கொடுத்தவர் கைது


போலீஸ் எழுத்து தேர்வு, போலி ஹால்டிக்கெட் தயாரித்து கொடுத்தவர் கைது
x
தினத்தந்தி 25 Aug 2019 10:45 PM GMT (Updated: 25 Aug 2019 11:48 PM GMT)

திண்டுக்கல்லில் நடந்த போலீஸ் எழுத்து தேர்வுக்கு போலி ஹால்டிக்கெட் தயாரித்து கொடுத்தவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல்,

தமிழகம் முழுவதும் நேற்று போலீஸ் பணிக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடந்தது.

இந்த தேர்வை எழுதுவதற்காக அய்யலூரை சேர்ந்த சரவணக்குமார், புவனேஸ்வரி ஆகியோர் வந்திருந்தனர். அப்போது அவர்கள் கொண்டு வந்த ஹால்டிக்கெட்டுகளை போலீசார் சோதனை செய்தனர்.

இதில் அந்த ஹால்டிக்கெட்டுகள் போலியானது என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் தேர்வு எழுத அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினர். மேலும் அவர்களிடம் துருவித்துருவி விசாரணை நடத்தினர்.

இதில், அய்யலூரில் கம்ப்யூட்டர் மையம் நடத்தும் சரவணக்குமார் (வயது 30) என்பவர் போலியாக ஹால்டிக்கெட் தயாரித்து சரவணக்குமார், புவனேஸ்வரி ஆகியோருக்கு கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து கம்ப்யூட்டர் மையம் நடத்தி வந்த சரவணக்குமாரை திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீஸ் எழுத்து தேர்வுக்கு போலியாக ஹால்டிக்கெட்டுகள் தயாரித்து கொடுத்ததாக தெரிவித்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Next Story