அகமதுநகர் அருகே மனைவி, 2 மகன்களை கொன்று விவசாயி தற்கொலை காரணம் என்ன? போலீஸ் விசாரணை


அகமதுநகர் அருகே மனைவி, 2 மகன்களை கொன்று விவசாயி தற்கொலை காரணம் என்ன? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 26 Aug 2019 9:30 PM GMT (Updated: 26 Aug 2019 7:42 PM GMT)

அகமதுநகர் அருகே மனைவி, 2 மகன்களை கொன்று, விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அகமதுநகர்,

அகமதுநகர் மாவட்டம் பார்னர் தாலுகா கன்னூர் கிராமத்தை சேர்ந்தவர் பாபாஜி பாடே(வயது41). விவசாயி. இவரது மனைவி கவிதா(35). இவர்களுக்கு ஆதித்யா(15), தனஞ்செய்(13) ஆகிய 2 மகன்கள் இருந்தனர். இந்தநிலையில் நேற்று பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் பாபாஜி பாடேவின் வீட்டுக்கு சென்றார். அப்போது, கதவு சாத்தப்பட்டு இருந்தது. வெகுநேரமாக தட்டியும் யாரும் கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தார்.

அப்போது வீட்டின் உத்திரத்தில் உள்ள இரும்பு கம்பியில் பாபாஜி பாடே மற்றும் அவரது மனைவி, மகன்கள் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் சத்தம்போட்டார். அவரது சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர்.

உடனே அவர்கள் இது குறித்து அங்குள்ள போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில், பாபாஜி பாடே மனைவி, 2 மகன்களை யும் தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்துவிட்டு, தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் 4 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பாபாஜி பாடே மனைவி, மகன் களை கொன்று தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story