குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் மனு


குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் மனு
x
தினத்தந்தி 27 Aug 2019 10:00 PM GMT (Updated: 27 Aug 2019 2:51 PM GMT)

குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது என்று மக்கள் குறை தீர்க்கும் முகாமில், ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெற்று வருகிறது. அதேபோல் திங்கட்கிழமையான நேற்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. முகாமுக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார்.

அப்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரியும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் மனு கொடுத்தனர். மொத்தம் 467 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கிய கலெக்டர், அவற்றின்மீது உரிய நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள உத்தரவிட்டார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் அபுல் காசிம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

டாஸ்மாக் கடை திறக்கக்கூடாது

ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் குலசேகரம் பேரூராட்சிக்கு உள்பட்ட 14-வது வார்டு முள்ளம்பாறவிளையை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

முள்ளம்பாறவிளையில் சுமார் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்தப் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை திறப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. அரசு உயர்நிலைப்பள்ளி, வழிபாட்டுத்தலங்கள், மருத்துவமனைகள், ரேஷன் கடை, பிறப்பு- இறப்பு அலுவலகம், பெட்ரோல் பங்க், அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியில் இந்த டாஸ்மாக் கடை அமைந்தால் மக்கள் பல்வேறு கஷ்ட-நஷ்டங்களுக்கு ஆளாக நேரிடும். எனவே குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடைகளை திறக்க கூடாது. மக்கள் நலன் கருதி எங்கள் பகுதியில் திறக்க இருக்கும் டாஸ்மாக் கடை மற்றும் மதுக்கூடத்தை உடனடியாக தடை செய்து நிறுத்தும்படி கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சாலை சேதம்

குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நிர்வாகிகள் ஐ.என்.டி.யு.சி. முருகேசன், ஜெயந்தி முருகேசன் மற்றும் எறும்புக்காடு ஊர் மக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நாகர்கோவில் மாநகராட்சி 41-வது வார்டுக்கு உட்பட்ட மேலதாராவிளையில் அய்யா கோவில் தெருவின் சாலை மிகவும் சேதம் அடைந்து மழைநீர் வடியாமல் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தாராவிளை, பழவிளை, எறும்புக்காடு, காமராஜ் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் அரசு பள்ளி மாணவ- மாணவிகள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். எனவே இந்த சாலையை போர்க்கால அடிப்படையில் சரிசெய்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இலவச பட்டா

தோவாளை மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் செல்வராஜ் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தோவாளை வட்டத்தில் இறச்சகுளம், ஈசாந்திமங்கலம் உள்ளிட்ட 10 ஊராட்சிகள் மற்றும் பூதப்பாண்டி, அழகியபாண்டிபுரம் ஆகிய 2 பேரூராட்சி பகுதிகளில் ஏழை கூலித்தொழிலாளர்கள், விவசாயிகள் புறம்போக்கு இடங்களில் குடியிருந்து வருகிறார்கள். அவர்களுக்கு தகுதியின் அடிப்படையில் இலவச பட்டா வழங்கி, இலவச வீட்டுமனைத் திட்டத்தில் வீடு வழங்கிடவும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பச்சைத் தமிழகம் கட்சியின் குமரி மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நாகர்கோவில், சுசீந்திரம், கன்னியாகுமரி பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் முக்கடல் அணை கடந்த 1945-ம் ஆண்டு திறக்கப்பட்டது முதல் இதுவரையில் தூர்வாரப்படவில்லை. எனவே இந்த அணையின் உயரத்தை மேலும் 20 அடி உயர்த்தி, அணையில் தேங்கியுள்ள வண்டல் மண்ணை அகற்றி, ஆழப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது.

கல்குவாரி

குமரி மாவட்ட கல்குவாரி கூலி தொழிலாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் மனு கொடுத்தனர். அந்த மனுவில், இந்த மாவட்டத்தில் ஏற்கனவே இயங்கிய கல்குவாரிகளை மீண்டும் இயக்கக்கோரிக்கை விடுத்திருந்தனர். செங்கோடி கல்லறவிளையைச் சேர்ந்த அருள்ராஜ் என்பவர் கொடுத்த மனுவில், “மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் உள்ள பொதுச்சொத்துக்கள் அதாவது பழைய பயனற்ற ஆழ்துளை கைவிசைப்பம்பு, தொலைத்தொடர்பு இரும்பு கம்பங்கள், குற்றவழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட பயன்படுத்த இயலாத வாகனங்கள் முதலியவற்றை விற்று மூளை சார்ந்த நோயாளிகள், மனநலம் குன்றியவர்களை பாதுகாக்க செலவிட வேண்டும்“ என கூறப்பட்டு இருந்தது. தமிழ்நாடு அம்பேத்கர் திராவிட மக்கள் முன்னேற்ற இயக்க நிறுவன தலைவர் ராதாகிருஷ்ணன் கொடுத்த மனுவில் கிள்ளியூர் தாலுகா அலுவலகத்தை போக்குவரத்து வசதி நிறைந்த புதுக்கடை பகுதியில் போலீஸ் நிலையம் அருகில் உள்ள அரசு இடத்துக்கு மாற்ற வேண்டும் எனக்கூறியிருந்தார்.

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க குமரி மாவட்ட தலைவர் கண்ணன், செயலாளர் மலைவிளை பாசி ஆகியோர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கடைவரம்பு பகுதிகளான மணக்குடி, பள்ளம், மேலகிருஷ்ணன்புதூர், ஆத்திக்காட்டுவிளை, தர்மபுரம் ஊராட்சிப் பகுதிகள் வழியாக பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சம்பக்குளம், அத்திக்கடை பாசன கால்வாய்கள் செல்கின்றன. இந்த கால்வாய்கள் தூர்வாரப்படாமல் கிடக்கின்றன. எனவே தாங்கள் தலையிட்டு சம்பக்குளம், அத்திக்கடை கால்வாயை தூர்வார உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story