பெண்கள் தங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்வதுடன் சமுதாயத்தையும் முன்னேற்ற வேண்டும் கலெக்டர் பேச்சு


பெண்கள் தங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்வதுடன் சமுதாயத்தையும் முன்னேற்ற வேண்டும் கலெக்டர் பேச்சு
x
தினத்தந்தி 27 Aug 2019 11:00 PM GMT (Updated: 27 Aug 2019 7:00 PM GMT)

பெண்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள் வதுடன் சமுதாயத்தையும் முன்னேற்ற வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் சாந்தா கூறினார்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கூட்ட அரங்கில் சமூக நலத்துறையின் சார்பில் “பெண் குழந்தை பாதுகாப்போம்“ “பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்“ என்ற திட்டத்தின் கீழ் ஊடக துறையினருக்கான கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்காகவும், அவர்களின் நல்வாழ்விற்காகவும் மத்திய, மாநில அரசுகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடையே கொண்டு செல்லும் வகையில் சமூக நலத்துறையின் சார்பில் ஊடகத்திற்கான கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெண்கள் நமது நாட்டில் கடவுளாக போற்றப்பட்டு வருகிறார்கள். அத்தகைய பெருமை வாய்ந்த பெண் குழந்தைகளின் பாதுகாப்பிலும், அவர்களின் கல்வி மேம்பாட்டிலும், நாம் ஒவ்வொருவரும் தங்களுக்குண்டான கடமையை சிறப்பாக செயல்படுத்த முன் வரவேண்டும்.

சமுதாய மாற்றத்திற்காகவும், பெண்களின் பாதுகாப்பிற்காகவும், அவர்களின் முன்னேற்றத்திற்காகவும் ஊடகத் துறையினர் மிகுந்த முக்கியத்துவம் அளித்து பணியாற்ற வேண்டும். இவ்விழிப்புணர்வு மூலமாக குழந்தைகள் சினிமாவிற்கும், வாழ்க்கைக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்துகொண்டு, தங்கள் வாழ்கையின் முன்னேற்றத்திற்கான திறமையை வளர்த்துக்கொள்ள முடியும். இத்திறமையின் மூலம் பெண்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்வதுடன் சமுதாயத்தையும் முன்னேற்றவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதையடுத்து சேலம் மாவட்ட மகளிர் நல அலுவலரும், பயிற்சி அளிப்பவருமான கோகிலா கூறுகையில், “பெண் குழந்தைகளை பாதுகாப்போம்“ “பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்“ என்ற திட்டத்தின் கீழ் சுகாதாரம், கல்வித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, சமூக நலத்துறை, செய்தித்துறை உள்பட 7 துறைகளை உள்ளடக்கி இத்திட்டத்தின் கீழ் பல்வேறு வகையான நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார். இந்த கருத்தரங்கில் மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன், மகளிர் திட்ட இயக்குனர் தேவநாதன், சமூக நல அலுவலர் ரேவதி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story