திருச்சியில் குடிபோதை தகராறில் வாலிபரை கொன்று எரித்த வழக்கில் நண்பர் கைது பரபரப்பு தகவல்கள்


திருச்சியில் குடிபோதை தகராறில் வாலிபரை கொன்று எரித்த வழக்கில் நண்பர் கைது பரபரப்பு தகவல்கள்
x
தினத்தந்தி 27 Aug 2019 11:15 PM GMT (Updated: 27 Aug 2019 7:09 PM GMT)

திருச்சியில் குடிபோதை தகராறில் வாலிபரை கொன்று எரித்த வழக்கில் நண்பரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி,

திருச்சி கல்லுக்குழி செங்குளம் காலனியை சேர்ந்த சண்முகநாதனின் மகன் தமிழழகன் (வயது 24). இவர் கடந்த 7-ந் தேதி தனது நண்பர்களுடன் சினிமா பார்க்க செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார். அதன்பின் அவர் வீட்டிற்கு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் பெற்றோர் தேடினர். ஆனாலும் அவர் கிடைக்கவில்லை. அவர் பொன்மலை தங்கேஸ்வரி நகரில் உள்ள கார்த்திக் என்கிற காக்கா கார்த்திக் (22) என்பவருடன் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து தமிழழகன் மாயமானது குறித்து போலீஸ் நிலையங்களில் தமிழழகனின் பெற்றோர் புகார் கொடுத்தபோது போலீசார் புகாரை ஏற்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் துணை கமிஷனர் நிஷாவிடம் தமிழழகனின் பெற்றோர் புகார் மனு அளித்தனர். அந்த புகாரை கண்டோன்மெண்ட் போலீசார் விசாரணை நடத்தும்படி அவர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து தமிழழகன் மாயமானதாக கண்டோன்மெண்ட் போலீசார் நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையில் மாயமான தமிழழகனை அவரது நண்பர்கள் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தமிழழகனின் நண்பரான கார்த்திக் மற்றும் 2 பேரும் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. இதையடுத்து கார்த்திக்கை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் தமிழழகனை அடித்து கொலை செய்து அவரது உடலை எரித்ததாக அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து கார்த்திக்கை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பொன்மலையை சேர்ந்த ஒருவரும், நவல்பட்டை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான கார்த்திக்கிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் பரபரப்பு தகவல்கள் வெளியானது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சம்பவத்தன்று தமிழழகன், கார்த்திக்குடன் சினிமா பார்க்க செல்வதாக கூறி வீட்டில் ரூ.1,000 பெற்றுள்ளார். அந்த பணத்துடன் அவர் நேராக பொன்மலை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுகுடித்தபோது அங்கு கார்த்திக்கிற்கும், பிரபாகரன் என்பவருக்கும் இடையே முன்விரோதத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. இருவரையும் தமிழழகன் சமாதானப்படுத்தி உள்ளார்.

அப்போது பிரபாகரன், தமிழழகனை கெட்டவார்த்தையில் திட்டி தாக்கி உள்ளார். இதனால் தமிழழகன் ஆத்திரமடைந்தார். அங்கிருந்து சென்றபின் 2 பேரும் சிறிது நேரத்திற்கு பிறகு வந்து பிரபாகரனை தாக்கி உள்ளனர்.

அதனைதொடர்ந்து நவல்பட்டில் உள்ள அவர்களது நண்பரான ஆட்டோ டிரைவரை சந்திக்க சென்றனர். அங்கு மது குடித்தபோது தமிழழகனுக்கும், அவரது நண்பர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் தமிழழகனை கார்த்திக் மற்றும் நண்பர்கள் 2 பேரும் சேர்ந்து அடித்து கொலை செய்துள்ளனர்.

பின்னர் அவரது உடலை பொன்மலை கணேசபுரத்தில் உள்ள சுடுகாட்டிற்கு எடுத்து வந்து எரித்துள்ளனர். இதற்கிடையில் பிரபாகரன் தன்னை தாக்கியவர்கள் குறித்து பொன்மலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன்பேரில் பொன்மலை போலீசார் கார்த்திக் மற்றும் தமிழழகனை தேடி வந்தனர்.

இந்த நிலையில் பொன்மலை போலீஸ் நிலையத்தில் கடந்த 8-ந் தேதி கார்த்திக் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். தமிழழகனை பொன்மலை போலீசார் தேடி வந்தனர். இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கார்த்திக் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். அவரை பிடித்து விசாரணை நடத்தியபோது தமிழழகன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தான் தமிழழகனை அடித்து கொலை செய்துள்ளனர். கொலையான தமிழழகன் கூலிவேலைக்கு சென்று வந்துள்ளார். கார்த்திக் அரியமங்கலம் பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வருகிறார்.

இவ்வாறு போலீசார் கூறினர்.

கொலை செய்யப்பட்ட தமிழழகனின் உடலை எரித்த இடத்தில் எலும்புகள் ஏதேனும் உள்ளதா? என போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சிக்கியுள்ள 2 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கின்றனர். விசாரணைக்கு பின் அவர்கள் 2 பேரும் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.

Next Story